PUBLISHED ON : மார் 19, 2026 03:33 AM

தி.மு.க.,வைச் சேர்ந்தவர் மேயராக இருந்தபோது, மதுரை மாநகராட்சியில் நடந்த, 200 கோடி ரூபாய் ஊழலை கண்டித்து, அ.தி.மு.க., கூட்டணி சார்பில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசும்போது, மதுரைக்கு அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பட்டியலிட்டவர், திடீரென, 'ஏம்ப்பா... கை தட்டுங்கப்பா' என, கூட்டத்தினரை பார்த்து அன்பாக அதட்டினார்.
தொடர்ந்து பேசியவர், 'அடுத்த முதல்வரா அண்ணே பழனிசாமி வர்றாரு... ஊழல் பேர்வழிகளை உள்ளே புடிச்சி போடப் போறாரு. யாரு யாரு ஊழல் செஞ்சாங்கன்னு எழுதிக் கொடுத்துருவோம்ல. உள்ளே புடிச்சி போட்டுருவாரு. தேர்தல் நெருங்குற சமயத்தில் இந்த ஆர்ப்பாட்டம் தேவையான்னு மதுரைக்காரங்க நினைக்கலாம்; ஒரு விழிப்புணர்வுக்கு தான்பா நடத்துறோம்' என, காமெடியாக பேசினார்.
இதை கேட்ட, கூட்டத்தில் நிலக்கடலை விற்றவர், 'யார் ஆட்சிக்கு வந்தாலும், நம்ம நிலைமை மட்டும் மாறவே மாறாது...' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

