/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
அரசு பஸ் நடத்துனர் உலக சாதனை சைக்கிள் பயணம்
/
அரசு பஸ் நடத்துனர் உலக சாதனை சைக்கிள் பயணம்
UPDATED : பிப் 14, 2024 06:09 AM
ADDED : பிப் 13, 2024 10:44 PM

மேட்டுப்பாளையம்: அரசு போக்குவரத்து கழக நடத்துனர், சாதாரண சைக்கிளில் உலக சாதனை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவை சார்பில், 35 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவை கொண்டாடி வருகிறது.
மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த விழாவில், பொதுமக்கள் சாலை விதிகளை கடைபிடித்து, விபத்துக்களை தவிர்ப்போம் என்ற கருத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன், நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் முன்னிலையில், உலக சாதனை சைக்கிள் பயணத்தை, அரசு பஸ் நடத்துனர் அறிவழகன் மேற்கொண்டார். விழாவுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் வரவேற்றார். மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் கொடியசைத்து, சைக்கிள் பயணத்தை துவக்கி வைத்தனர்.
நடத்துனர் அறிவழகன் சாதாரண சைக்கிளில், ஒரு கையால் சிலம்பம் சுற்றிக்கொண்டு, மற்றொரு கையால் சைக்கிள் ஓட்டியபடி கின்னஸ் விதிமுறைப்படி தொடர்ந்து, இடைவிடாமல் சவாரி செய்து, 50 கிலோ மீட்டர் தொலைவை கடப்பது, பயணத்தின் நோக்கமாகும். மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு ஆலாங்கொம்பு வழியாக சிறுமுகை சென்றடைந்தார்.
அங்கு சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், துணைத்தலைவர் செந்தில்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வரவேற்றனர்.
பின்பு அங்கிருந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர் வழியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்று, சாதனை செய்தார். வழி நெடுகிலும், சாலை பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு வாசகங்கள், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி சென்றார்.
காலை, 10:45 மணிக்கு துவங்கிய இந்த சைக்கிள் பயணம், மதியம், 2:15 மணிக்கு கோவை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நிறைவடைந்தது.
3 மணி 30 நிமிடத்தில் இந்த உலக சாதனை நிகழ்த்தியதற்கு, நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில், உலக சாதனைக்கான சான்றிதழை பொறுப்பாளர் அரவிந்த் சிவா, சைக்கிள் வீரர் அறிவழகனுக்கு வழங்கினார். முடிவில் செல்வி அறிவழகன் நன்றி கூறினார்.

