PUBLISHED ON : மே 19, 2026 12:16 AM

'அடுத்து, தேசிய அரசியலை ஒரு கை பார்க்க தயாராகி வருகிறார், எங்கள் தலைவர்...' என, அசாம் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வ சர்மா பற்றி பெருமிதத்துடன் கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
அசாமில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வ சர்மா, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். அசாமில், காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர், தொடர்ச்சியாக இரண்டு முறை முதல்வராக பதவி வகிப்பது இதுதான் முதல் முறை. இதனால், உற்சாகத்தில் திளைக்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா.
இத்தனைக்கும், ஹிமந்த பிஸ்வ சர்மா, காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர். அசாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோயுடன் ஏற்பட்ட மோதலால், அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் ஐக்கியமானார். அதற்கு பரிசாக, அவருக்கு முதல்வர் பதவியை வழங்கியது பா.ஜ., மேலிடம்.
அசாம் பிரச்னை மட்டுமின்றி, தேசிய அளவிலான பிரச்னைகளிலும் எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆவேசமாக பதில் அளித்து, பா.ஜ., மூத்த தலைவர்களையே ஆச்சரியப்படுத்தி வரும் ஹிமந்தாவின் பார்வை, இப்போது டில்லியை நோக்கி திரும்பியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
