PUBLISHED ON : மே 18, 2026 12:11 AM

'எங்கள் தலைவரின் மகிழ்ச்சியை கெடுக்கின்றனரே...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலைப் பார்த்து பரிதாபப்படுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என்ற முக்கிய பொறுப்பில் உள்ளார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வழக்கம் ராகுலுக் கு உண்டு.
தேர்தல் நடந்தாலும் சரி, பார்லிமென்ட் நடந்தாலும் சரி; அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார். இது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் பொருட்படுத்துவது இல்லை.
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக ராகுல் சமர்ப்பித்துள்ள வருமான கணக்கு விபரங்களுக்கும், அவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயண செலவுகளுக்கும் இடையே பெரிய முரண்பாடு இருப்பதாக, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்த வருமான கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.
கிரண் ரிஜிஜு கூறுகையில், 'எந்தவொரு எம்.பி., யும் வெளிநாடு செல்ல திட்டமிட்டால், லோக்சபா அல்லது ராஜ்யசபா செயலகத்திற்கு, மூன்று வாரங்களுக்கு முன் அவர் தகவல் தெரிவிக்க வேண்டும்.
'ராகுலின் வெளிநாட்டு பயண செலவுகள், அவரது தேர்தல் பிரமாண பத்திரத்தில் அறிவிக்கப்பட்ட வருமானத்தை விட அதிகமாக இருந்தால், அது குறித்து வருமான வரித்துறைக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்...' என்றார்.
இதை கேட்டு, 'ராகுலின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை போட பார்க்கின்றனரே...' என, காங்., கட்சியினர் புலம்புகின்றனர்.
