படப்பிடிப்பில் மூன்று வேளையும் உப்புமா, பிஸ்கட் : ஐஸ்வர்ய லட்சுமி
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான 'கட்டா குஸ்தி 2' படத்தின் வெற்றி மூலம் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் அவர் நடித்துள்ள 'ஆஷா' என்கிற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ஊர்வசி, ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை சபார் சணல் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஈரோடு அருகில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்ற போது தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.
இதுகுறித்து அவர் கூறும் போது, ஈரோடு மாவட்டம் பர்கூர் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சுமார் ஒரு மாதம் வரை இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அது மிகவும் பின்தங்கிய கிராமப் பகுதி என்பதால் சரியான நெட்வொர்க் வசதி கூட அங்கே இல்லாமல் சிரமப்பட்டோம். அது மட்டுமல்ல, அங்கே எங்களுக்கு பிடித்தமான உணவுப் பொருட்கள் கிடைக்காததால் பெரும்பாலான நாட்களில் மூன்று வேளையும் உப்புமா மற்றும் பிஸ்கட்டுகளை மட்டுமே சாப்பிட்டு நாட்களை கழித்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.