ஆஸ்கர் விருதை தவற விட்ட தமிழ் படங்கள்
சினிமா துறையில் எத்தனையோ விருதுகள் வழங்கப்பட்டாலும் உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை பெறுவது தான் சினிமா துறையில் உள்ள ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். அதற்கான தீவிர முயற்சிகளில் உலகம் முழுவதிலும் உள்ள திரை துறையை சார்ந்தவர்கள் முயற்சித்து வருகிறார்கள். ஆனால் அனைவருக்கும் அந்த விருது கிடைத்து விடுவது கிடையாது. நிச்சயம் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது கிடைக்கும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, கடைசி நிமிடத்தில் விருது கை நழுவி போன படங்கள் ஏராளம்.
அப்படி ஆஸ்கர் விருதின் 'சிறந்த சர்வதேச திரைப்படம்' (Best International Feature Film) பிரிவில் போட்டியிட இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப் பரிந்துரை (Nomination) பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை கடைசி நேரத்தில் தவறவிட்ட முக்கிய தமிழ் திரைப்படங்கள் பற்றிய தெரிந்து கொள்ளலாம்.
தெய்வ மகன் (1969)
ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த காவிய திரைப்படம் இதுவாகும். பெற்றோரின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு மகனின் கதை. தமிழ் சினிமாவில் இருந்து முதன்முதலில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது. இருந்தாலும் இறுதிப் பரிந்துரை வரை செல்ல முடியவில்லை.
நாயகன் (1987) & தேவர் மகன் (1992)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன், மும்பை தாதா வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டது. டைம் இதழின் சிறந்த 100 உலகப் படங்களில் ஒன்றாக இடம்பெற்ற போதிலும், ஆஸ்கரின் இறுதிப் பரிந்துரை வரை செல்ல முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து, பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் திரைக்கதை எழுதி நடித்த தேவர் மகன் படம் கிராமத்து நிலப்பிரபுத்துவ அமைப்பையும் நவீன சிந்தனையையும் மோதவிட்ட மிகச் சிறந்த படைப்பாக அமைந்தது. இந்திய அளவில் பெரும் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படமும் ஆஸ்கர் பந்தயத்தில் இறுதிப் பட்டியலை எட்டவில்லை.
அஞ்சலி (1990)
மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, பிரபு நடிப்பில் வெளியான படம் இது. குழந்தைகளை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக பேபி ஷாலினி உள்பட அனைத்து குழந்தைகளின் நடிப்பும் பிரமாதமாய் அமைந்தது. படத்திற்கு இளையராஜாவின் இசை உயிராய் அமைந்தது. இந்த படமும் ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டு இறுதிப்பட்டியலில் தேர்வாகாமல் போனது.
குருதிப்புனல் (1995), இந்தியன் (1996),ஹே ராம் (2000)
பி. சி. ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான குருதிப்புனல், நவீன ஒலிப்பதிவு மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்காக உலக சினிமா தரத்திற்கு ஈடான படமாகப் பேசப்பட்டது.
தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன், லஞ்சத்திற்கு எதிரான பிரம்மாண்ட போராட்டக் களமாக அமைக்கப்பட்டு இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாகச் சென்றது.
கமல்ஹாசனின் இயக்கத்தில் வெளியான ஹே ராம், இந்தியப் பிரிவினை மற்றும் காந்திய சிந்தனைகளை ஆழமாகப் பேசிய வரலாற்றுப் படைப்பாக சர்வதேச விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. இவை அனைத்தும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டாலும், இறுதிப் பட்டியலில் நுழையத் தவறிவிட்டன.
விசாரணை (2016), கூழாங்கல் (2021)
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை, மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் வன்முறையை நேரடியாகப் பேசிய அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படமாகும். வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற இத்திரைப்படம், ஆஸ்கர் போட்டியின் முதற்கட்டத் தேர்வுகளைத் தாண்டி சென்று கடைசி நிமிடத்தில் இறுதிப் பரிந்துரையைத் தவறவிட்டது.
அதேபோல், பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் (Pebbeles), ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் உயரிய விருதைப் பெற்றது. வறட்சி மற்றும் குடும்ப வன்முறையை மிகக் குறைந்த உரையாடல்களுடன் காட்சிப்பூர்வமாக விளக்கிய இத்திரைப்படமும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக ஆஸ்கர் வரை சென்று இறுதிப் பட்டியலுக்கு முன் வெளியேறியது.
சூரரைப்போற்று (2020)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று (2020) திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக அனுப்பப்படாவிட்டாலும், ஆஸ்கர் விருது விதிகளின்படி பொதுப் பிரிவில் (General Category) நேரடியாகப் போட்டியிடத் தகுதிபெற்ற திரைப்படமாக இது அமைந்தது. 93-வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இயக்குநர் (சுதா கொங்கரா) உட்பட சுமார் 15 முக்கிய பிரிவுகளில் இத்திரைப்படம் போட்டியிடத் தகுதிபெற்றது. உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று சர்வதேச விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த போதிலும், இறுதிக்கட்ட பரிந்துரை (Nomination List) பட்டியலில் இத்திரைப்படத்தால் இடம் பிடிக்க முடியாமல் போனது.
தமிழ் சினிமா உலகளவில் தொழில்நுட்ப ரீதியாகவும் கதைக்கள ரீதியாகவும் சர்வதேசத் தரத்தை எட்டியிருந்தாலும், ஆஸ்கார் உறுப்பினர்களிடம் படத்தைக் கொண்டு சேர்க்கத் தேவையான பிரம்மாண்டமான பட்ஜெட் மற்றும் சர்வதேச விநியோகக் கட்டமைப்பு இல்லாததே இத்திரைப்படங்கள் கடைசி நிமிடத்தில் வாய்ப்பை இழக்க முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.