காதல் முட்டாள் ஆக்குதா? சாதனையாளர் ஆக்குதா?
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகும் படத்துக்கு 'அன்பில் அவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்குகிறார். ஓ மை கடவுளே படத்தை தயாரித்தவரும், அசோக் செல்வன் அக்காவுமான அபிநயா செல்வம், ஐங்கரனுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். ஐங்கரன் நிர்வாகியாக அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியன், அக்கா கவிதா பாண்டியன் இருக்கின்றனர். இப்படியாக குடும்ப கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளது.
அசோக் செல்வன் கூறுகையில், ‛‛நான் நடித்த ப்ளூஸ்டார் படத்துக்குபின் இரண்டரை ஆண்டு இடைவெளிக்குபின் இந்த படம் வெளியாகிறது. சில நேரங்களில் சில திரைப்படங்களில் பணியாற்றும் போது அது வெளிவருவதற்காக சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். அதை நாம் அனுமதிக்கத்தான் வேண்டும். ஒவ்வொரு படமும் ஏதேனும் ஒரு வகையில் புதிதாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதற்காக ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்று உழைப்பவன் நான்.
இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதிய கதை. தற்போது சினிமா மாறி உள்ளது. கதையை விட அந்த கதையை சொல்லும் ஸ்டைல்தான் அதாவது ஸ்கிரீன் பிளே தான் முக்கியம் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை பொறுத்தவரை கதையாகப் பார்த்தால் இதற்கு முன் இதே போல் நிறைய கதை வெளியாகி இருக்கிறது. ஆனால் அதன் ஸ்க்ரீன் பிளே... அது வழங்கக்கூடிய திரையரங்க அனுபவம்... நிச்சயம் புதிதாக ரசிக்கக் கூடியதாக இருக்கும் என முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன். ரசிகர்கள் ரசிக்க கூடிய தியேட்டரிக்கல் மொமென்ட்ஸ் நிறைய உண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் ரசிக்கக்கூடிய நிறைய மொமென்ட்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.
இது பெண்களை... அவர்கள் படும் கஷ்டங்களை மட்டும் பேசவில்லை. இதில் ஏராளமான மாஸ் மொமென்ட்ஸ் இருக்கிறது. காதல் - புத்திசாலியை முட்டாளாக்கும். சாதாரணமானவனை சாதனையாளராக்கும். இதை பிரதிபலிக்கும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
ப்ரீத்தி முகுந்தன் படம் குறித்து பேசுகையில், ‛‛இந்தப் படம் திருமணம் ஆகாத பெண்களுக்கும்... திருமணமான பெண்களுக்கும் பிடிக்கும்'' என்றார்.