உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொழிலதிபரின் மன்னிப்பை ஏற்பதாக அறிவித்த ஹனி ரோஸ்

தொழிலதிபரின் மன்னிப்பை ஏற்பதாக அறிவித்த ஹனி ரோஸ்

தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை ஹனி ரோஸ். அதேசமயம் மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். கடந்த வருடம் கேரளாவில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவரிடம், தொழிலதிபரான பாபி செம்மன்னூர் என்பவர் மிகவும் அநாகரிகமாகவும் தன்னை கேவலப்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்டார் எனக் கூறி அவர் மீது எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஹனி ரோஸ்.. இதனைத் தொடர்ந்து பாபி செம்மன்னூர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில், தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் தொழிலதிபர் பாபி செம்மன்னூர், தான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படவில்லை என்றும், நகைச்சுவைக்காகப் பேசிய விஷயங்கள் நடிகைக்கும் அவரது குடும்பத்திற்கும் இவ்வளவு பெரிய மன வேதனை உண்டாக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறி ஒரு பதிவிட்டு, அதன் மூலம் பகிரங்கமாக நடிகை ஹனி ரோஸிடம் மன்னிப்பு தெரிவித்துள்ளதுடன் தன் மீதான வழக்கை திரும்பப் பெறுமாறும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட ஹனி ரோஸ், எங்களுக்கும் யாரையும் துன்புறுத்த வேண்டும் என்கிற நோக்கம் இல்லை. தொடக்கத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த விவகாரம் இவ்வளவு தூரம் சென்றிருக்காது என்று கூறியுள்ளார். அதேசமயம் வழக்கின் எஞ்சிய அம்சங்களை கவனமாகப் பரிசீலித்த பிறகே, வழக்கை முழுமையாகத் திரும்பப் பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !