330 கோடி வசூலித்து நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'திரிஷ்யம் 3'
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான மலையாளப் படம் 'திரிஷ்யம் 3'. இப்படம் 330 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து, “தலைமுறைகள் கடந்து தொடரும் பயணம்.
கேரளாவில் ஒரு கதையாகத் தொடங்கிய இது, மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைச் சென்றடைந்தது. பதிமூன்று ஆண்டுகள் மற்றும் மூன்று பாகங்களுக்குப் பிறகும், இந்தப் பயணம் தொடர்ந்து வரலாற்றைப் படைத்து வருகிறது.
இதை உங்கள் சொந்தக் கதையாக ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இப்படம் இவ்வளவு வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
330 கோடி வசூலைப் பெற்றதை அடுத்து மலையாள சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்பு 303 கோடியுடன் முதலிடத்தில் இருந்த 'லோகா' படத்தை இரண்டாமிடத்திற்குத் தள்ளிவிட்டது.
மலையாளத் திரையுலகத்தில் 'திரிஷ்யம் 3, லோகா' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே 300 கோடி வசூலைக் கடந்துள்ளது.