ஒரு ரூபாய் கூட வாங்காமல் கங்கனாவுக்கு டைட்டிலை விட்டுக்கொடுத்த ஜான் ஆபிரகாம்
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தானே டைரக்ஷனில் இறங்கியது, அதன்பிறகு பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு எம்பி-யாக தேர்வு செய்யப்பட்டது என பிஸியாக மாறியதால், அவரது படங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. கடந்த வருடம் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய 'எமர்ஜென்சி' என்கிற படத்தில் நடித்திருந்தார் கங்கனா. தற்போது அவரது நடிப்பில் 'பாரத் பாக்ய விதாதா' என்கிற படம் தயாராகி வருகிறது. இந்த வரிகள் நமது இந்திய தேசிய கீதத்தில் இடம்பெறும் வார்த்தைகள் என்றாலும், இது தனக்கு டைட்டிலாகக் கிடைத்ததற்கு பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தான் காரணம் என்று கூறியுள்ளார் கங்கனா.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கங்கனா பேசும்போது: இந்த படத்திற்கு முதலில் நர்ஸஸ் ஆப் காமா என்று தான் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் முழு கதையையும் கேட்டபோது இந்த டைட்டில் படத்திற்குப் பொருந்தவில்லை என்பதை உணர்ந்தோம். குறிப்பாக இப்படம் இந்தியாவின் ஆன்மாவையும் சாமானியர்களின் துணிச்சலையும் பிரதிபலிப்பதால், இதற்கு 'பாரத் பாக்ய விதாதா' என்ற தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தோம். ஆனால், அந்தத் தலைப்பு ஏற்கனவே நடிகர் ஜான் ஆபிரகாமின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, எந்தவொரு தயக்கமும் காட்டாமல், இதற்காக எந்தவொரு கட்டணமும் பெற்றுக் கொள்ளாமல் ஒரே நாளில் அந்தத் தலைப்பை எங்களுக்காக விட்டுக் கொடுத்தார். இந்த சமயத்தில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்..