ADDED : செப் 12, 2025 08:06 AM

அபாயம் அகற்றும் ஸிம்ஹ கணபதி
வனவிலங்குகளின் அரசன் சிம்மம், ஸிம்ஹ கணபதி என்ற சொல்லுக்குப் தெய்வங்களுக்கு எல்லாம் சிம்மமாக, தலைவராக விளங்குபவர் என்பது பொருள். சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, தும்பிக்கையோடு கூடிய சிம்ம முகத்தோடு விளங்குபவர் இந்த கணபதி. இவரை வழிபட்டால் அனைத்து விதமான பயங்களும் நீங்கும்.
தியான சுலோகம்
வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம் தக்ஷே விதத்தே கரை: -
வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம் ஸந்மஞ்ஜரீம் சாபயம் |
சுண்டா தண்டலஸந் ம்ருகேந்ரவதந: சங்கேந்துகௌரச் சுப: -
தீவ்யத் ரத்ந நிபாம்சுகோ கணபதி: பாயாதபாயாத் ஸ ந: ||
வீணாம் - வீணையையும்
கல்பலதாம் - கற்பகக் கொடியையும்
அரிம் ச - சக்கரத்தையும், இவற்றுடன்
வரதம் - வரத முத்திரையையும்
தக்ஷே - வலதுபக்க
கரை: - கரங்களால்
விதத்தே - தாங்கியிருப்பவரும்.
வாமே - இடது பக்கத்தில் (உள்ள கைகளால்)
தாமரஸம் ச - தாமரை மலரையும், அதனோடு
ரத்னகலசம் - ரத்தினங்கள் நிறைந்த கலசத்தையும்
ஸந்மஞ்ஜரீம் ச - நல்ல அழகான பூங்கொத்தினையும், இவற்றோடு
அபயம் - அபய முத்திரையையும்
விதத்தே - தாங்கியிருப்பவரும்,
சுண்டா தண்டலஸந் - தும்பிக்கையுடன் பிரகாசிக்கின்ற
மருகேந்திர வதந: - சிம்மத்தின் முகத்தைக் கொண்டவரும்
சங்கேந்துகௌர: - சங்கு மற்றும் நிலா போன்ற வெண்ணிறத்தவரும்
சுப: - மங்களத்தைச் செய்பவரும்
தீவ்யத் - நன்கு பிரகாசிக்கக் கூடிய
ரத்நநிப அம்ஸுக: - ரத்தின நிறத்தில் ஒளிரும் பட்டாடையை உடுத்தி உள்ளவருமான
ஸகணபதி: - அந்த ஸிம்ஹ கணபதி நமக்கு
ந: - எங்களை
அபாயாத் - அபாயங்களில் இருந்து
பாயாத் - பாதுகாக்கட்டும்.
வீணை: இதை மீட்டுவதன் மூலம், உயிர்களின் சிந்தனைகளை ஈர்த்து ஒடுக்குவதால், இது ஒடுக்குதலைக் குறிக்கும்.
கற்பகக் கொடி: உயிர்கள் விரும்புபவற்றை அருள்பவன் இறைவன் என்பதற்கான அடையாளம்.
சக்கரம்: திருமாலின் ஆயுதம், கூர்மை, காலம், செயல்நேர்த்தி இவற்றின் அடையாளம்.
பூங்கொத்து: உயிர்களின் விருப்பங்களைக் குறிப்பது.
வரதம்: உயிர்கள் வேண்டும் வரங்களை அருள்பவர் கணபதி என்பதைக் குறிப்பது.
தாமரை: ஞானத்தையும் சூரியனால் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் குறிப்பது.
ரத்தின கலசம்: அனைத்து செல்வங்களையும் தருபவர் என்பதை உணர்த்துகிறது.
அபயம்: உயிர்களின் பயங்களை நீக்குபவர் கணபதி என்பதைக் காட்டும் முத்திரை.
பலன்: பாதுகாப்பு, வெற்றி, விரும்பிய பயன், செல்வம், கலைத் திறன் கிடைக்கும்.
அருள் தொடறாம்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்