
இலங்கையில் உள்ள வானரப் படைகள் ராவண வதம் முடித்ததும் அங்கிருந்து புறப்படத் தயாராயினர். அப்போது வானரப் படைவீரர்கள் அனைவரும் இருக்கிறார்களா என்று சரிபார்க்கும் படி சேனாதிபதியிடம் உத்தரவிட்டார் ராமர்.
கணக்கெடுப்பு பணி முடிந்தது. ஒரே ஒரு வானரம் காணாமல் போனது தெரிந்தது.
“சுவாமி... வசந்தன் என்னும் வானரம் மட்டும் எங்கு சென்றது என்று தெரியவில்லையே” என்றார் சேனாதிபதி. அனுமனை அழைத்து, “காணாமல் போன வசந்தனைக் கண்டுபிடிப்பது உன் வேலை” என்றார் ராமர்.
எங்கு தேடியும் வசந்தன் தென்படவில்லை. இறுதியாக எமலோகத்தில் வசந்தன் இருப்பது தெரிய வந்தது.
எமலோகம் சென்ற அனுமன்,“ எப்படி இங்கே வந்தான் வசந்தன்?” எனக் கேட்டார்.
“சுவாமி... கோபம் கொள்ளாதீர்கள். பூலோகத்தில் உள்ள அனைவரும் உமது புகழைக் கேட்டு மகிழ்கிறார்கள். அதைக் கேட்கும் ஆசை எனக்கும் வந்தது. நான் பூலோகம் வந்தால், என் பார்வை பலத்தால் பலரும் எமலோகம் வர வேண்டிய சூழல் உண்டாகும். அதனால் வசந்தனை வரவழைத்து உமது பெருமைகளைக் கேட்டு மகிழ்ந்தேன்” என்றான் எமன். அதன்பின் வசந்தனுடன் பூலோகம் வந்தார் அனுமன். அவர்களைக் கண்ட வானரங்கள் துள்ளிக் குதித்தன.