தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ மூங்கிலில் காற்று வரும்… காசும் வரும்

மூங்கிலில் காற்று வரும்… காசும் வரும்

மூங்கிலில் காற்று வரும்… காசும் வரும்


UPDATED : அக் 06, 2024 10:21 PM

ADDED : அக் 06, 2024 10:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2024 10:21 PM ADDED : அக் 06, 2024 10:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்ம ஊரில் பனை, வாழை நார்களில் இருந்து கூடை, பாய் தயாரிக்கப்படுவது பிரபலம் என்றால் மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த சுதாகர் மூங்கிலில் கைவினைப் பொருட்களை தயாரித்து தன்னை தனித்துவமாய் அடையாளப்படுத்துகிறார்.

இரண்டாண்டுகளுக்கு முன் சிறியளவில் தொடங்கிய தொழில் இன்று 100 பேருக்கு வேலை வாய்ப்பு தரும் அளவுக்கு முன்னேறியது குறித்து சுதாகர் விவரித்தார்.

நானும் மனைவி தர்ஷனாவும் ஆரம்பத்தில் மூங்கில்களை வாங்கி வீட்டுக்குத் தேவையான சேர், கட்டில், தண்ணீர் ஊற்றும் கப் தயாரித்தோம். இதைப் பார்த்தவர்கள் விசாரிக்கவே தொழிலாக துவங்கினோம். மூங்கில் இலையை காயவைத்து துாளாக்கி டீத்துாள் தயாரித்தோம். இதில் நார்ச்சத்து சிலிகான் சத்து அதிகமாக உள்ளதால் பெண்களுக்கு ஏற்றது என கேள்விப்பட்டு தமிழக அரசு அனுமதியுடன் சென்னை மற்றும் ஐதராபாத் ஆராய்ச்சி மையத்தில் பரிசோதனை செய்தோம். இந்த புதுமையான ஸ்டார்ட் அப் தொழிலுக்காக 'டான்சிம்' நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் கடன் தந்தனர். பின் மூங்கில் டீத்துாளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சேர், கட்டில் தவிர தனித்துவமான பொருட்கள் தவிர மூங்கில் வீடு, அதனுள்ளே மூங்கில் பொருட்கள் என புதுமையை கொண்டு வந்தோம். கல், மண், சிமென்ட், கான்கிரீட் இன்றி கட்டப்படும் மூங்கில் வீடுகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாததால் நல்ல வரவேற்பு கிடைத்தது. மதுரை புல்லுாத்து பாய்ஸ் டவுனில் மாணவர்களுக்கு இலவச கைவினைப்பொருட்கள் பயிற்சி அளித்தபோது அவர்கள் மூலம் மற்ற பள்ளிகளில் இருந்தும் பயிற்சி அளிக்க அழைத்தனர். கல்லுாரி மாணவர்களுக்கும் கற்றுத்தந்தோம். ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மூலம் தமிழக அரசின் திட்டத்தின் கீழ், சமீபத்தில் ரூ.85 லட்சம் கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தினோம்.

காப்பி கப், ஜூஸ் கப், கிண்ணம், குடிநீர் பாட்டில், அலங்கார தோரணங்கள், ஓவியங்கள் வரை மூங்கிலில் தயாரிக்கிறோம். அலைபேசிக்கான ஒலிபெருக்கியாக மூங்கில் ஸ்டாண்ட் தயாரித்துள்ளோம். துளைகளுடன் கூடிய மூங்கில் ஸ்டாண்டில் அலைபேசியை வைத்து பாட்டு கேட்டால் மூங்கில் வழியாக காற்று உள்ளே சென்று சத்தம் மூன்று மடங்காக அதிகரிப்பதோடு இனிமையாகவும் இருக்கும். புட்டு மாவையும் மூங்கில் பாத்திரத்தில் வைத்து சமைக்கலாம். சமீபத்தில் தமிழக அரசுக்காக மூங்கிலில் 50 நினைவுப்பரிசு தயாரித்து கொடுத்தது பெருமையான விஷயம்.

மூங்கில் பொருட்களை தயாரித்து அவற்றை கடுக்காய், வேப்பஞ்சாறு, புங்கன் இலை சேர்த்து பதப்படுத்துவதால் தீங்கில்லாததாக மாறுகிறது. டம்ளர், பாட்டில், கப் வாங்கிய பின் சுடுதண்ணீரில் கல்உப்பு சேர்த்து கழுவினால் மூங்கிலில் உள்ள அசுத்தம் வெளியேறி விடும். பாட்டிலில் குளிர் பானமோ, காப்பியோ, தண்ணீரோ குடித்த பின் கவிழ்த்து வைத்து உலரவிட வேண்டும். தேன், நாட்டுசர்க்கரை, உப்பு வைத்தால் ஒன்றும் ஆகாது. தேங்காய் எண்ணெய் ஊற்றி வைத்தால் மணம் அதிகமாகும்.

மூங்கிலில் நிறைய வகைகள் இருந்தாலும் தமிழகம், கர்நாடகம், ஆந்திராவின் முள்ளாலான கல் மூங்கில் தான் முக்கிய மூலப்பொருள். மூங்கிலின் வேர், குருத்து, இலை வரை அனைத்தையும் மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றுவது தான் கலைநயம்.

சிலவகை மூங்கிலில் பாட்டில்கள் தயாரிக்கலாம். சிலவற்றில் கைவினைப்பொருள் தயாரிக்கலாம். மீதமான மூங்கில் துகள்களை எரித்து பல்விளக்கும் பொடி, பாத்திரம் துலக்கும் பொடி தயாரிக்கிறோம். கரித்துகள்களுடன் எலுமிச்சை புல் சேர்த்து வாசனை சோப்பு தயாரிக்கிறோம்.

மூங்கிலில் கழிவு என்பதே இல்லை. எல்லாமே காசு தான். காசாக்கும் தொழில்நுட்பத்தை இலவசமாக கற்றுத்தருகிறேன் என்றார்.

அலைபேசி: 95001 37477.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us