PUBLISHED ON : ஏப் 09, 2026 06:26 AM

- நரேந்திர மோடி,
பிரதமர்
இந்தியா முழுதும் பிஹு, விஷு, வைசாகி மற்றும் தமிழ் புத்தாண்டு என விழாக்கோலம் பூண்டுள்ள இவ்வேளையில், மக்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் புதுப்பித்தல் உணர்வு நம்மை நிரப்புவது போல, இந்திய ஜனநாயகம் ஒரு புதிய வரலாற்றுப் பாதையில் பயணிக்கத் தயாராகிவிட்டது.
குறிப்பாக, ஏப்ரல் 11 அன்று மகாத்மா பூலேவின் 200-வது பிறந்த நாள் மற்றும் ஏப்ரல் 14 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாள் வரவுள்ள நிலையில், சமத்துவம் நோக்கிய நம் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
அஸ்திவாரம்
இதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 16 அன்று பார்லிமென்ட் மீண்டும் கூடவுள்ளது. மகளிர் இட ஒதுக்கீட்டை மேம்படுத்துவதற்கான சட்ட திருத்த மசோதாவை விவாதித்து நிறைவேற்றுவதே, இந்த கூட்டத்தொடரின் முதன்மை நோக்கம்.
இதை ஒரு சட்டமியற்றும் கடமையாக மட்டும் பார்க்காமல், தேசத்தின் சரிபாதி மக்கள் தொகையாக இருக்கும் பெண்களின் கனவுகளை நனவாக்கும் ஒரு புனிதமான வாய்ப்பாக நாம் கருத வேண்டும்.
இன்று, விண்வெளி முதல் பாதுகாப்பு படை வரை இந்திய பெண்கள் நிகரற்ற சாதனைகளை படைத்து வருகின்றனர். கல்வி, சுகாதாரத்தில் நாம் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள், அவர்களது முன்னேற்றத்திற்கு வலுவான அஸ்திவாரமிட்டுள்ளன. இருப்பினும், நிர்வாகத்திலும், கொள்கை முடிவெடுக்கும் தளங்களிலும் பெண்களின் பங்களிப்பு, இன்னும் அவர்களின் தகுதிக்கு ஏற்ற அளவில் அமையவில்லை என்பது நிதர்சனம்.
அதிகாரத்தில் பெண்கள் பங்கேற்கும்போது, அவர்கள் ஒரு புதிய பார்வையையும், சமூகத்தின் ஆழமான சிக்கல்களை தீர்க்கும் தெளிவான அனுபவங்களையும் கொண்டு வருகின்றனர்.
வரும் 2029 லோக்சபா தேர்தலையும், அதற்கு முன் வரும் சட்டசபை தேர்தல்களையும், மகளிர் இட ஒதுக்கீட்டுடன் நடைபெறச் செய்வது நம் ஜனநாயக கடமை. கடந்த பல தசாப்தங்களாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒருமித்த கருத்து ஏற்படாததால், இந்த இலக்கை நாம் அடைய முடியாமல் போனது.
அதே நேரத்தில் செப்., 2023-ல் பார்லிமென்டில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியது, என் வாழ்வின் மிகச் சிறந்த தருணமாகும். அதை முழுமையாக செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு வினாடி தாமதமும், நம் ஜனநாயக வலுவூட்டலில் ஏற்படும் தாமதமாகும்.
ஆதரவளிக்க வேண்டும்
இது, ஒரு குறிப்பிட்ட அரசின் அல்லது அரசியல் கட்சியின் வெற்றி அல்ல; ஒட்டுமொத்த தேசத்தின் வெற்றி. எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும், எம்.பி.,க்களும் கட்சி எல்லைகளை கடந்து, தேச நலன் கருதி இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஒற்றுமையே இந்தியாவின் பலம். அந்த ஒற்றுமையின் மூலம், நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த இந்த மாற்றத்தை இப்போது நனவாக்குவோம். இந்தியப் பெண்களின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், வலிமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய புதிய இந்தியாவை கட்டமைப்போம்.
