PUBLISHED ON : மார் 22, 2026

சுற்றுச்சூழல் வெப்பம் அதிகரிப்பதால், கர்ப்பம் தரிப்பதில் சிரமங்கள் உள்ளதா?
கர்ப்பிணியின் உடல் வெப்பம், கருவுக்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
நம் நாட்டில் இது போன்ற ஆய்வு நடப்பது இதுவே முதல்முறை. 800 கர்ப்பிணிகளிடம் நடத்திய ஆய்வில், அதிக வெப்பம் உள்ள இடத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு எதிர்பாராத வகையில் 'அபார்ஷன்' எனப்படும் கருச்சிதைவு, ஒரே மாதிரியான உடல் உழைப்பு செய்தாலும், வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு, குறைபிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதும் அதிகம் உள்ளது.
வெப்பமயமாவதால் அனைவரும் பாதிக்கப்பட்டாலும், கிராமத்தில் வயல் வெளிகளில் வேலை செய்யும் பெண்கள், நகரங்களில் குடிசை பகுதியில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
என்ன தீர்வு?
கோடை ஆரம்பிக்கும் போது, ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனைகளில், சில தன்னார்வலர்களை நியமித்து, வாட்ஸாப், ஐ.வி.ஆர்., எனப்படும் தானியங்கி குரல் வழித் தகவல் வாயிலாக, அதிக வெப்பம் உள்ள நேரங்களில் எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்புவோம். கம்பங்கூழ், மோர் என்று அதிகம் செலவு இல்லாத உணவுகளை சாப்பிடச் சொல்கிறோம்.
கர்ப்பம் தரித்தவுடன் வெள்ளை பூசணி, பப்பாளி சாப்பிடக் கூடாது போன்ற நம்பிக்கைகள் இருக்கின்றன. இந்த நம்பிக்கைகளை மாற்றுவது எங்கள் நோக்கமாக இருக்காது.
எதை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்குமோ, அதைச் சாப்பிடச் சொல்கிறோம். இதில் உப்பு சேர்க்கலாமா என்பதை அவரவரின் டாக்டரிடம் கேட்டு செய்யச் சொல்கிறோம்.
உடல் சூட்டைக் குறைக்க, ஈரத் துணியால் அவ்வப்போது கழுத்தின் பின் பகுதியைத் துடைக்க வேண்டும்.
கிராமங்களில் வயல் வேலை செய்பவர்களுக்கு, அனுபவத்தில் உடல் சூட்டைக் குறைக்கும் வழிகள் தெரியும்.
கோடைக் காலத்தில், அவ்வப்போது, வாய்க்கால் நீரில் முகம், கழுத்துப்பகுதி, கை, கால்களை கழுவிக் கொள்வர்.
அலுவலகம் செல்பவர்கள், பவுடர், கிரீம் என்று பூசிக் கொள்வதால், மாலையில் வீட்டிற்கு சென்றுதான் முகம் கழுவும் வழக்கம் இருக்கிறது. ஒப்பனை செய்திருக்கிறோம் என்பதற்காக, முகம் கழுவாமல் இருக்கக் கூடாது. உடல் சூடு குறைவது தான் முக்கியம்.
முடிந்தால் இளநீர் குடிக்கலாம். பாக்கெட்டில் விற்கும் கலர் கலரான குளிர் பானங்கள், குடித்ததும் உடல் சூடு குறைவது போன்ற உணர்வை தரும். ஆனால், இவற்றில், பிரக்டோஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
வெயில் நேரங்களில் கர்ப்பிணி பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். காலை, மாலை என்று வெப்பம் குறைந்த சமயங்களில், தேவையானதை சமைத்து வைத்துக் கொள்வது என்று நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வந்தாலே, வெப்பம் தாக்காமல் இருக்கலாம்.
ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்தே கர்ப்பிணி, முதியவர்களுக்கு விழிப்புணர்வு குறுஞ்செய்தியை அனுப்புகிறோம்.
வயதானவர்களுக்கு தாகம் உணர்வு அதிகமாக இருக்காது.
கொழுப்பு அதிகம் இருந்தாலும், உடல் சூட்டை உணர முடியாது. குழந்தைகளுக்கும் தெரியாது.
அந்தக் காலத்தில் பழைய சோறு, கம்பங்கூழ் குடித்து விட்டு வேலைக்கு செல்வர். இன்று இட்லி, இடியாப்பம் என்று கடையில் வாங்கி சாப்பிடுகின்றனர்.
மதிய வேளையில், குஸ்கா, இரவில் பரோட்டா என்று சாப்பிடுகின்றனர். இதை செரிமானம் செய்வதற்கு உடல் வெப்பம் அதிகரிக்கும். கம்பங்கூழ் குடித்தால், அதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், செரிமானம் மெதுவாக நடக்கும். ரத்த சர்க்கரை அளவு சீராக அதிகரிக்கும். உடல் சூடும் அதிகரிக்காது.
உடல் சூடு என்ற ஒன்று பல டாக்டர்களுக்கே தெரிவதில்லை.
இயல்பைவிட உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், காய்ச்சல் என்று நினைத்து பாராசிட்டமால் தருகின்றனர். உடல் சூட்டிற்கும், தொற்றின் அறிகுறியான காய்ச்சலுக்கும் வேறுபாடு தெரிந்து சிகிச்சை தர வேண்டும். உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், இரவில் உறக்கம் சரியாக இருக்காது. யோகா, சுவாசப் பயிற்சி கற்றுத் தந்து அவர்களின் உறக்கம் மேம்படுகிறதா என்று பார்க்கிறோம்.
டாக்டர் வித்யா வேணுகோபால், இயக்குநர், பொது சுகாதாரத் துறை, ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம், சென்னை. 97108 30010ehesru@ehe.org.in

