PUBLISHED ON : மார் 29, 2026

தலை, கால் என்று எது வலிப்பது போன்ற உணர்வு இருந்தால் போதும், பாராசிட்டமால் உட்பட வலி நிவாரணிகளை போட்டுக் கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது.
என்னால் மறக்க முடியாத ஒரு சம்பவம், என்னுடைய பள்ளித் தோழியின் தந்தை இளம் வயதிலேயே இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தது தான். எதற்கெடுத்தாலும் வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிடும் பழக்கம் அவருக்கும் இருந்தது.
அலோபதி மாத்திரை என்றில்லை, ஆயுர்வேத மாத்திரையாக இருந்தாலும், 'இதெல்லாம் ஒன்றும் செய்யாது' என்று சர்வ சாதாரணமாக வலி மாத்திரைகளை வாயில் போட்டுக் கொள்கிறோம். எந்த மருந்தாக இருந்தாலும், அவசியம் இல்லாமல் சாப்பிடக் கூடாது.
தேவையில்லாமல் வலி நிவாரணிகளை சாப்பிடும் போது, சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல் என்று அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். பாராசிட்டமால் மாத்திரை அட்டையில் தேவையில்லாமல் சாப்பிடுவது, பிரதான உறுப்புகளில் செயலிழப்பை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கை வாசகங்கள் இருக்கிறது. அதையும் மீறி, சாப்பிட்டு விட்டு, பக்க விளைவுகள் ஏற்பட்ட பின், டாக்டரையும், மருந்துகளையும் குற்றம் சொல்வதில் எந்த பலனும் இல்லை.
இது சரியான அணுகுமுறையே கிடையாது.
என்ன செய்ய வேண்டும்?
அடிக்கடி வரும் தலைவலி, கால்வலி, மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி என்று எதுவாக இருந்தாலும், வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் எதன் ஆதிக்கத்தால் வலி வருகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தோஷங்களை சம நிலைக்கு கொண்டு வர முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
உதாரணமாக, மூக்கைச் சுற்றியுள்ள சைனஸ் பகுதியில், நீர் கோர்ப்பதால் தலைவலி வரலாம்.
இப்பிரச்னைக்கு மருந்து எடுத்தால் சரியாகி விடும்.
உடல் தகுதிக்கு மீறிய செயல்பாடுகளால், வாதம் அதிகரித்து, மூட்டுகளில் ஏற்படும் வலியால், மைக்ரேன் வலி வரும். இவர்களுக்கு நெய், எண்ணெய் கலந்த மருந்துகளை தந்தால் வாதம் குறையும்.
புளித்த ஏப்பம் உட்பட பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் தலைவலிக்கு, புனர்னவாதி கஷாயம், திராக்ஷாதி கஷாயம் நல்ல பலன் தரும்.
வாதம் அதிகரித்தால் வஸ்தி, கபத்தினால் என்றால் வமணம் என்று தேவைக்கு ஏற்ப சிகிச்சை தர வேண்டும்.
இந்த மாதிரி செய்யும் போது, வலி நிவாரணி சாப்பிடும் பழக்கத்தில் இருந்து மெதுவாக வெளியில் வர முடியும். அதை விடுத்து, அல்வா சாப்பிடுவது மாதிரி வலி நிவாரணிகளை சாப்பிட்டால், நீங்கள் தெரிந்தே மிகப் பெரிய அபாயத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
டாக்டர் மீரா சுதீர், ஆயுர்வேத மருத்துவர், ஸ்ரீஹரியம் ஆயுர்வேதம், சென்னை. 86101 77899sreehareeyam.co.in

