/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
அடுக்குமாடி குடியிருப்பு வளாக சாலைகள் யு.டி.எஸ்.,ல் சேருமா?
/
அடுக்குமாடி குடியிருப்பு வளாக சாலைகள் யு.டி.எஸ்.,ல் சேருமா?
அடுக்குமாடி குடியிருப்பு வளாக சாலைகள் யு.டி.எஸ்.,ல் சேருமா?
அடுக்குமாடி குடியிருப்பு வளாக சாலைகள் யு.டி.எஸ்.,ல் சேருமா?
ADDED : மார் 14, 2026 06:56 AM

அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு வாங்கும் நிலையில், அதற்கான நிலம் தொடர்பான ஆவணங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
பொதுவாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் நிலத்தை தங்கள் பெயரில் வாங்குவது இல்லை. நில உரிமையாளரிடம் பொது அதிகாரம் பெற்று அதன் அடிப்படையிலேயே செயல்பட கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
இத்தகைய திட்டங்களில் வீடு வாங்குவோர், நிலம் யார் பெயரில் உள்ளது, அவருக்கு அந்த நிலம் எப்போது, எப்படி வந்தது என்பதை தெளிவாக விசாரிக்க வேண்டும். இதில் பத்திரங்களை பார்க்கும் போது மேலோட்டமாக அனைத்து தகவல்களும் சரியாக இருப்பது போன்று தெரியும்.
ஆனால், பத்திரத்தில் காணப்படும் தகவல்களை துல்லியமாக படிப்பதுடன் பிற ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும். இத்துடன், பத்திரத்தில் உள்ள அளவுகள், வரைபடத்தில் உள்ள அளவுகள் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
நிலத்தில் எவ்வளவு பகுதி கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது, ஓ.எஸ்.ஆர்., நிலம் எவ்வளவு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் கட்டடங்களுக்கு இடைப்பட்ட இடங்களில் பாதை அமைக்கும் விஷயத்தில் வீடு வாங்குவோர் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதைக்கான பகுதியும் சேர்ந்து அத்திட்டத்தில் யு.டி.எஸ்., கணக்கிடப் படுகிறதா என்று பாருங்கள்.
குறிப்பாக, வரைபடத்தில் பாதைக்கான நிலம் பொது பயன்பாட்டில் இருக்க வேண்டும். கட்டடத்துக்கான பகுதி மட்டும் யு.டி.எஸ்.,ல் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் வீடு வாங்குவோர் கவனமாக இருந்தால் மட்டுமே பிற்காலத்தில் பல்வேறு பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
கட்டடங்களுக்கு இடைப்பட்ட பகுதியை சாலை அமைக்க ஒதுக்கப்பட்டால் அது பொது நிலமாக இருக்க வேண்டுமா என்பதில் கட்டுமான நிறுவனம் தெளிவாக செயல்பட வேண்டும். வீடு வாங்கும் போது, கட்டடங்களுக்கு இடைப்பட்ட பகுதி யு.டி.எஸ்.,ல் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவாக விசாரிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில், வீடு வாங்கும்போது பத்திரத்திலும், வரைபடத்திலும் எந்தெந்த நிலம் யு.டி.எஸ்.,ஆக பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். பொது இடம் எது, யு.டி.எஸ்., வகையில் வரும் நிலம் எது என்பது போன்ற விஷயங்களில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
இதில் கவனக்குறைவாக இருந்தால், பிற்காலத்தில் சாலை மேம்பாட்டு பணிகள், மறு மேம்பாட்டு நிலையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே, வீடு வாங்கும் போதே ஒவ்வொருவரும் இது தொடர்பான விபரங்களை முழுமையாக பெற வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
கட்டட வரைபடத்தில் பாதைக்கான நிலம் எது, அது பொது பயன்பாட்டில் இருக்கிறதா என்று பாருங்கள், கட்டடம், அதன் செட்பேக் எனப்படும் பக்கவாட்டு காலியிடம் தவிர்த்து பாதைகளுக்கான இடம் முறையாக ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

