தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/ மூனு லட்டு ஆபீஸர் ஆட்டுறாரு காலு! வேலுக்கு ஸ்கெட்ச் போடுறாரு பாலு...

 மூனு லட்டு ஆபீஸர் ஆட்டுறாரு காலு! வேலுக்கு ஸ்கெட்ச் போடுறாரு பாலு...

 மூனு லட்டு ஆபீஸர் ஆட்டுறாரு காலு! வேலுக்கு ஸ்கெட்ச் போடுறாரு பாலு...


ADDED : பிப் 03, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வா லாங்குளத்தின் கரையில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, 'வாக்கிங்' செல்லத் துவங்கினாள் சித்ரா.

பின்தொடர்ந்து வந்த மித்ரா, ''என்னக்கா, நம்மூர்ல அரசியல் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருச்சு போலிருக்கே,'' என ஆரம்பித்தாள்.

''ஆமாப்பா, செந்தில் பாலாஜியா, வேலுமணியா... ஜெயிக்கப் போறது யாருன்னு ரெண்டு தரப்புக்கும் போட்டி வந்துருச்சு. தி.மு.க. தரப்புல ஒவ்வொரு தொகுதிலயும் அலுவலகம் திறந்துட்டு வர்றாங்க. அ.தி.மு.க. தரப்புல பொதுக்கூட்டம் நடத்தி, நலத்திட்ட உதவி வழங்குறாங்க. வீட்டுக்கு ஒரு பரிசுப் பொருள் கொடுக்கறதுக்கு பூத் ஏஜன்ட்டுகள் மூலமா டோக்கன் கொடுக்குறாங்க...''

''எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா பிறந்த நாளை காரணமா சொல்லி, 10 தொகுதியிலும் நலத்திட்ட உதவி வழங்கப் போறாங்க. விழாவுக்கு வந்து பரிசுப் பொருள் வாங்கிட்டு போகலாம்னு சொல்லிட்டு வர்றாங்க. சிங்காநல்லுார்ல ஆரம்பிச்சிட்டாங்க. தொண்டாமுத்துார்ல ஏழாம் தேதி நட த்துறதுக்கு ஏற்பாடு நடக்குது. வேட்டி, சேலை, சில்வர் தட்டு, டிபன் பாக்ஸ், டம்ளர் என எட்டு பொருட்கள் அடங்கிய பரிசு வழங்கப் போறாங்களாம். தி.மு.க. நிர்வாகிகள் குடும்பத்துல இருக்கற பெண்கள் டோக்கன் கேட்டாலும் கொடுக்கச் சொல்லியிருக்காங்களாம்,''

உதயசூரியன் உதிக்கும் ''தொண்டாமுத்துார்ல உதயசூரியன் ஜெயிக்கும்னு செந்தில்பாலாஜி சூளுரையோடு பேசுனாராமே...''

''அதுவா... போன வாரம் நாம பேசுன மாதிரி, குனியமுத்துார்ல தொகுதி அலுவலகம் திறந்திருக்காங்க. அந்த விழாவுல, 2021ல வாங்குன ஓட்டு எவ்வளவு, 2024ல வாங்குன ஓட்டு எவ்வளவுன்னு பட்டியலிட்டு பேசுனாரு. 2021யை விட 2024ல 16 ஆயிரம் ஓட்டு ஜாஸ்தியா விழுந்திருக்கறதை சுட்டிக் காட்டியிருக்காரு. பூத்துக்கு 20 குடும்பத்தை தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட வைக்கணும்னு சொல்லி இருக்காரு,''

''தொண்டாமுத்துார் தொகுதியில மட்டும் 66 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை கொடுக்குறாங்களாம். அவுங்க குடும்ப ஓட்டை தி.மு.க.வுக்கு போட வைக்கணும். அடித்துச் சொல்கிறேன்... ஓங்கிச் சொல்கிறேன்... இந்த தடவை தி.மு.க. ஜெயிக்கும்னு பேசியிருக்காரு...தேர்தல் முடிவு அறிவிக்கறப்போ, அருமையான விருந்து இருக்குன்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. ஆளுங்கட்சி தரப்பு உற்சாகத்துல மிதக்குது,''

''ஆளுங்கட்சியில இருந்தும் வீடு வீடா பரிசு கொடுக்கப் போறதா சொல்றாங்களாமே...''

''ஆமா, மித்து! ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை குடும்பம் இருக்குன்னு கணக்கெடுத்து இருக்காங்க. அதுல, மகளிர் ஓட்டு எத்தனை இருக்குன்னு பட்டியல் தயாரிச்சிருக்காங்க. அவுங்களை கவரும் வகையில் பரிசு இருக்கும்னு ஆளுங்கட்சிக்காரங்க 'மினுமினு'ப்போட சொல்றாங்க,'' என்றபடி, கரையில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் சித்ரா.

த.வெ.க. ஒரு மர்ம தேசம் அவ்வழியே நடந்து சென்ற கல்லுாரி மாணவி வைத்திருந்த மொபைல் போனில் விஜய் படம் இருந்தது. அதை கவனித்த மித்ரா, ''த.வெ.க.வுல என்ன நடக்குதுன்னு மர்மமா இருக்குதே...'' என கேட்டாள்.

''மித்து, ஏழாம் தேதி தேர்தல் அறிக்கை தயாரிக்கற குழு நம்மூருக்கு வருது. த.வெ.க.வை இளவட்டங்கள் ஆதரிக்குது. லேப்-டாப் வழங்குற மாதிரி, அவுங்களை ஈர்க்கற மாதிரி, ஸ்பெஷலான வாக்குறுதி சொல்லணும்னு நினைக்கிறாங்களாம். அதனால, இல்லத்தரசிகள், இளம்பெண்கள், இளைஞர்களை சந்திச்சு, அவுங்க எண்ணங்களை தெரிஞ்சுக்க ஆசைப்படுறாங்களாம். அதுக்கான ஆலோசனை நடந்துட்டு இருக்கு...''

''அதெல்லாம் சரி... நம்மூர்ல செங்கோட்டையன் முகாமிட்டு இருக்காராமே... அவருக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே நெருக்கமே இல்லைன்னு சொல்றாங்களே...''

''அதுவும் உண்மைதாம்ப்பா! அவரை மாவட்ட நிர்வாகிகள் கண்டுக்கறதே இல்லையாம். மாற்றுக்கட்சியினர் சேர்ந்தாலும், அவங்களோட கைகோர்த்து செயல்படுறதில்லைன்னு சொல்றாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வடக்கு தொகுதியை சேர்ந்த அ.ம.மு.க.காரங்க, த.வெ.க.வுல இணைஞ்சிருக்காங்க.

அவுங்க, மரியாதை நிமித்தமா மாவட்ட நிர்வாகிகளை சந்திச்சாங்க. அப்போ, கட்சி நிகழ்ச்சிக்கு எங்களையும் கூப்பிடுங்கன்னு சொல்லி இருக்காங்க. அவுங்களை கட்சி 'வாட்ஸ்அப்' குழுக்கள்ல கூட சேர்க்கறதுக்கு யோசிக்கிறாங்களாம்,''

''சிங்காநல்லுார்ல நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு, தலைமைக்கு தெரிவிக்காமல் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்திருக்காங்க. மேலிருந்து ஆட்சேபனை தெரிவிச்சதும் நிகழ்ச்சியையே ரத்து செஞ்சிட்டாங்களாம். ரசிகர் மன்றத்தை சேர்ந்தவங்களே கட்சி பணி செஞ்சிட்டு வர்றாங்க; அவுங்கள மீறி வேற யாரையும் வேலை செய்றதுக்கு விடுறதில்லைன்னு புலம்புறாங்க...''

அவரு வேணாம்! ''எம்.எல்.ஏ. மகனை வேட்பாளரா அறிவிக்க வேண்டாம்னு அ.தி.மு.க.வுல போர்க்கொடி துாக்குறாங்களாமே...''

''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். அவிநாசி தொகுதியில முன்னாள் சபாநாயகர் தனபால் எம்.எல்.ஏ.வா இருக்காரு. வரப்போற தேர்தல்ல அவருக்கு பதிலா மகனுக்கு 'சீட்' கேக்குறாரு. இதுக்கு அ.தி.மு.க.வுல இன்னொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்குது.

ரெண்டு தடவை எம்.எல்.ஏ. ஆகிட்டாரு. மறுபடியும் அவுங்க குடும்பத்துக்கே கொடுக்கணுமா, இந்த தடவை தொகுதி நிர்வாகிகளுக்கு கொடுக்கணும்னு சொல்றாங்க. ரெண்டு கோஷ்டியா பிரிஞ்சிருக்கறதுனால, வெற்றி வாய்ப்பு பறிபோகுமேன்னு தொண்டர்கள் நினைக்கிறாங்க,''

''அதெல்லாம் இருக்கட்டும்... மருதமலை கோயிலை சுத்தி சுத்தி வர்ற முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் ஒருத்தரு, ரெண்டு கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்களையும் சந்திச்சு பேசியிருக்காராமே...'' என்றபடி, மீண்டும் நடக்க ஆரம்பித்தாள் மித்ரா.

''அவரா, கொங்கு கட்சியை சேர்ந்தவரு. ஆளுங்கட்சி பொறுப்பாளரை உரிமையோடு உறவு முறை சொல்லி அழைப்பாரு. அந்தளவுக்கு நெருக்கம். பொறுப்பாளர் வீட்டுக்குப் போயி, 'மரியாதை' நிமித்தமா சந்திச்சு பேசியிருக்காரு. அதுக்கப்புறம்... அ.தி.மு.க. மாஜியின் சகோதரரையும் சந்திச்சிருக்காரு. ரெண்டு தரப்பிலும் 'அப்படி' என்ன ரகசியம் இருக்கும்னு அரசியல் வட்டாரத்துல பரபரப்பா பேசிட்டு இருக்காங்க,''

''துடியலுார் டியூகாஸ் கூட்டுறவு சங்கத்துல நடந்த போலி நகை விவகாரத்துல அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காம கிடப்புல போட்டுட்டாங்களே...''

''ஆமாப்பா... ரெண்டு கோடி ரூபாக்கு போலி நகை வச்சு, கடன் வாங்கியிருக்காங்க. மதிப்பீட்டாளரையும், உடந்தையா இருந்தவங்களையும் கைது செஞ்சாங்க. ரெண்டு அலுவலர்களை சஸ்பெண்ட் செஞ்சாங்க. அதோட சரி... வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாறிடுச்சு. போலி நகையை அடமானம் வச்ச 16 பேர் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. போலீஸ் மவுனமா இருக்கு. புது போலீஸ் கமிஷனர் விசாரணைய முடுக்கி விடணும்னு எதிர்பார்க்குறாங்க...''

'தொழில் உரிமத்தை புதுப்பிக்க வர்ற வியாபாரிகளை மாநகராட்சி அலுவலர்கள் அலைய விடுறாங்களாமே...''

''ஆமாப்பா... ஒவ்வொரு வருஷமும் சுகாதார ஆய்வாளர்களை சந்திச்சு தொழில் உரிமத்தை புதுப்பிப்பாங்க. பணம் கட்ட வந்தா, அவரைப் போயி பாருங்க; இவரைப் போயி பாருங்கன்னு அலைய விடுறாங்க. மாநகராட்சி வரி வசூல் மையத்துல அதுக்கான பணத்தை வாங்கணும்னு வியாபாரிகள் கேக்குறாங்க...''

ஒன்றல்ல... மூனு பதவி ''இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்... மாநகராட்சியில ஒரு அதிகாரிக்கு மூனு மண்டல பதவி கொடுத்திருக்காங்களாமே... அவரு ஒருத்தர் மட்டும் 60 வார்டுகளை 'கவனி'க்கிறாராமே...''

''உண்மைதான்! நகரமைப்பு பிரிவுல இருக்காரு அந்த அதிகாரி. அரசாணைப்படி, ஒரு அதிகாரிக்கு 10 வார்டு ஒதுக்கணும். மண்டலத்துக்கு ரெண்டு அதிகாரி நியமிக்கணும். ஆனா, ஒரே ஒருத்தரு ஒரே நேரத்துல மூனு மண்டலத்துல 60 வார்டுகளை கவனிக்கிறாருன்னா... எப்படிப்பட்டவரா இருப்பாருன்னு யோசிச்சு பாரு... 'கண்ணா... மூனு லட்டு தின்ன ஆசையா...'ங்குற டயலாக்குதான் கார்ப்பரேஷன்ல லேட்டஸ்டா ஓடுற டயலாக்கே... இதற்கெல்லாம் காரணம் அவர், மாநகராட்சி உச்ச அதிகாரியின் சொந்த ஊர்க்காரராம். அதனால, கூடுதல் பொறுப்பு கொடுத்திருப்பாரோன்னு சந்தேகப்படுறாங்க...'' என்றபடி, 'வாக்கிங்'கை நிறைவு செய்தாள் சித்ரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us