ADDED : டிச 13, 2025 07:53 AM

''மீ ன்களை போல அதிலுள்ள பொம்மைகளும் பார்க்க அழகாக இருப்பதோடு, தொட்டியின் பராமரிப்புக்கும் உதவும்,'' என்கிறார், வேதகுமார்.
பெங்களூருவில் உள்ள வேதா அக்குவாரியம் உரிமையாளரான இவர், எந்தெந்த வகை தொட்டியில் என்னென்ன பொம்மைகளை வைக்கலாம் என்பது குறித்து நம்மிடம் பகிர்ந்தார்.
அவை:
தொட்டிக்குள் பொம்மை வைப்பது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமல்ல. வித்தியாசமான நிறங்களை உருவாக்கி, மீன்களை கவரவும், மிதக்கும் பொம்மைகளை பார்த்து துள்ளி விளையாடவும், இனப்பெருக்க காலத்தில் மறைவிடத்தில் முட்டைகளை வைப்பதற்கும் என பல்வேறு நோக்கங்களுக்காக பொம்மைகள் பயன்படுகின்றன.
பிளாஸ்டிக் பொம்மைகளை தொட்டியில் வைப்பது பழைய நடைமுறை. இதை மீன்கள் கடிக்க நேரிடலாம். தற்போது ரெசின் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை கடித்தால் மீன்களுக்கு எந்த கெடுதலும் இல்லை. அக்ரலிக் வகை பெயின்ட்களே பயன்படுத்துவதால், தண்ணீரும் நிறம் மாறாது.
ஆக்ஸிஜன் தேவைப்படும் மீன்களுக்கு, பிரத்யேக கருவி உள்ளது. இவற்றுடன், நீர்குமிழிகளை உருவாக்கும் பொம்மைகளை தொட்டிக்குள் வைப்பதால், கூடுதல் ஆக்ஸிஜன் மீன்களுக்கு கிடைக்கும்.
தொட்டிக்கு சுத்திகரிப்பான் பொருத்தினாலும், களிமண்ணால் செய்யப்பட்ட டெரகோட்டா பொம்மைகளை வைப்பதால், இயற்கை சுத்திகரிப்பானாக அவை செயல்படும்.
மொரைன் அக்குவாரியத்தில் வளரும் நீமோ இன மீன்களுக்கு, பவளப்பாறை வைக்க வேண்டும். ஆனால், உண்மையான பவளபாறைகளை பயன்படுத்த தடை உள்ளது. இதற்காக, ரெசின் மூலம் பவளப்பாறை பொம்மைகள் செய்து தொட்டிக்குள் வைத்தால், மீன்கள் குஷியாக நீந்தும்.
தாவரங்களை தொட்டிக்குள் வைக்கும் போது, பாறைகளுக்கு நிஜ கற்கள் கிடைக்காத பட்சத்தில், டெரக்கோட்டா, ரெசினால் செய்யப்பட்ட கற்களையும் வைக்கலாம்.
எந்த அலங்காரமும் இல்லாத தனித்தொட்டி, ஒரு பவுலில் மட்டும் மீன் வளர்ப்பவர்களும், இதுபோன்ற பொம்மைகளை வைத்தால் தொட்டியின் அழகைமேம்படுத்தி காட்டும்.
பொம்மைகளை எந்த நோக்கத்திற்காக தொட்டியில் வைக்கிறோம் என்பதை தெரிந்து பின் வாங்குவதே சிறந்தது, என்றார்.

