ADDED : ஜூன் 10, 2026 10:46 PM

- நமது நிருபர் -:
சோழர் பேரரசால் கலை நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள, சிவாலயங்களில், கேசம்பள்ளி அருகே உள்ள சுயம்பு புவனேஸ்வரர் கோவிலும் ஒன்று. இது, தங்கவயலின் கிழக்கே, 15 கி.மீ.,யில், கேசம்பள்ளி அருகே மடிவாளா கிராமத்தில் உள்ளது.
சிறிய குன்று, அதை ஒட்டிய அழகிய ஏரி, பக்கத்தில் கற்களால் கலை நுட்பத்துடன் செதுக்கி, பிரமிக்க தக்க வகையில் துாண்களுடன் கூடிய இக்கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, தமிழ் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கற்கட்டடம் என்பதற்கான அடையாளமாக தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கல்வெட்டுகள் இதில் பல உள்ளன. பல கல்வெட்டுகள் பராமரிப்பின்றி கீழே விழுந்து கிடக்கின்றன.
வரலாற்று பேராசிரியர்களின் குழு புராதனமான இக்கோவிலை பற்றிய துல்லியமான விபரங்களை நேரில் வந்து ஆய்வு செய்தனர். சோழர் காலத்து கல்வெட்டுகளை பாதுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு சென்றனர்.
இந்த கோவில், தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின், இதை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. பாரம்பரியமான இக்கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளை காண, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து பலர் வந்து செல்கின்றனர்.
தற்போது, கர்நாடக சுற்றுலா துறை பட்டியலில் இக்கோவிலும் இடம் பெற்றுள்ளன. சீரழிந்து போகாமல் பாதுகாக்க கர்நாடக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் கேசம்பள்ளி கிராமம் என்றாலே பலருக்கும் மாநிலத்தின் முதல் முதல்வர் கே.சி.ரெட்டி வாழ்ந்த ஊர் என்று தான் அழைப்பர்.
ஆனால், பழம் பெருமை வாய்ந்த சோழர் காலத்து சிற்ப கோவில் மறைக்கப்பட்ட காலம் மாறி, சுற்றுலா தலமாக உயிர் பெற்றுள்ளது.
கால்நடை போன்ற பிராணிகள் வளர்ப்புக்கு தேவையான வற்றாத நீர் நிரம்பிய ஏரி இங்கு உள்ளது. இந்த ஏரியில் நீர் கோழி, கொக்கு, உட்பட வகை வகையான பறவை இனங்களும், சிறகடித்து பறக்கின்றன. மீன் வளர்ப்பு தொழிலும் இந்த ஏரியில் நடக்கிறது. வெண்தாமரை, செந்தாமரை மலர்களும் நீரில் தவழ்வதை காணலாம். இது, கோடை வெப்பத்தை தணிக்கும் இயற்கையின் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது!
