மொபைல்போனுக்கு ஏன் அடிமையாகிறோம்?
மகிழ்ச்சி உணர்வுக்கு காரணம், மூளையில் சுரக்கும் 'டோப்பமைன்' எனும் ஹார்மோன்.
ஒரு செயலை சரியாக செய்து முடிக்கும் போது, முடிந்தது என்பதை சிறு வெற்றியாக எண்ணி, நம் மூளை தனக்குத்தானே கொடுக்கக்கூடிய பரிசுதான் இந்த 'டோப்பமைன்'.
சிறிதோ, பெரிதோ எந்த வேலை செய்தாலும், அது முடியும் போது இது சுரக்கும். கதை, நாவல் படித்தல், படம், நாடகம் பார்த்தல், வெற்றி, பாராட்டு பெறுதல் போன்றவற்றால் இது சுரக்கும்.
ஆனால் டிஜிட்டல் உலகில், மொபைல் போனில் பார்க்கக்கூடிய வீடியோக்கள், சிறியதாக இருப்பதால் சிறிது நேரத்திலேயே டோப்பமைன் சுரக்கிறது. மீண்டும் பார்க்க துாண்டி அடிமைப்படுத்துகிறது.
அதிகரித்துள்ள மொபைல் போன் பழக்கத்தால், பிறரிடம் பேசுதல், சிரித்தல், மகிழ்ச்சியாக நேரம் செலவழித்தல், சுற்றுலா போன்றவற்றில் இயற்கையாக சுரக்கும் 'டோப்பமைன்' அளவு குறைகிறது.
ஏனெனில் மொபைல் போன் பயன்பாட்டில் கிடைத்த டோப்பமைன்கள் அதிகம் என்பதால் இவற்றிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு குறைவாக தோன்றும்.
தினமும் மொபைல் போன் பார்ப்பதால் இது அதிகம் சுரந்து, நரம்புகளில் பதிவாகிறது.
ஒரு நாளில் அதே அளவுக்கு அல்லது அதிகமாக மீண்டும் சுரந்தால் மட்டுமே மகிழ்ச்சியான உணர்வை பெற முடியும்.
பிற செயலில் மகிழ்ச்சி இல்லாததால் நாம் மொபைல் போனுக்கு மேலும் அடிமையாகிறோம்.
எல்லா நேரமும் சுரக்கும் டோப்பமைனால் கவனக்குறைபாடு, கோபம், எரிச்சல், துாக்கமின்மை, பசியின்மை, படிப்பிலும் உடல் இயக்கத்திலும் ஆர்வமின்மை, அதிக எடை போன்ற பல பிரச்னைகள் ஏற்படும்.
பிறர் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் திறன் குறையும். எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது. பிறருடன் உரையாடுவது, விளையாடுதல், டீம் ஒர்க் போன்றவை கடினமாகும்.
அதனால் தனிமையில் மொபைல் மட்டும் பார்த்து மகிழ்ச்சியாக இருக்க தோன்றும். எவற்றையும் விரும்ப மாட்டோம். பிற்காலத்தில் உணர்ச்சி ரீதியாக அதிகம் பாதிக்கும்.