போலி மருந்துகள் குறித்து புகாரளிக்க க்யூ ஆர் குறியீடு

போலி மருந்துகள் குறித்து புகாரளிக்க நாடு முழுதும் அனைத்து மருந்தகங்களிலும், 'க்யூ ஆர்' குறியீடை காட்சிப்படுத்த வேண்டும் என, மருந்து கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, மருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவுகள் குறித்து புகார் தெரிவிக்க, புதிய செயலியை, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கியுள்ளது.

இதன் வாயிலாக, 'க்யூ ஆர்' குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும், தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

அவற்றை அனைத்து மருந்தகங்களின் முகப்பிலும், பொதுமக்கள் எளிதில் தெரியும் வகையில் காட்சிப்படுத்த, மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இனி, தரமற்ற மற்றும் போலி மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு பாதிப்பு குறித்து, 'க்யூ ஆர்' குறியீடு வாயிலாக, பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கலாம்.

உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம், மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென, மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.