வந்தாச்சு இ-பாஸ்போர்ட்... அம்சங்கள் என்ன? எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமக்களுக்கு மின்னணு பாஸ்போர்ட் (இ-பாஸ்போர்ட்) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது. கடந்தாண்டு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியது.
அச்சேவை தற்போது நாடு முழுவதும் குறிப்பிட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் படிப்படியாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சாதாரண பாஸ்போர்ட்களிலிருந்து இந்த இ-பாஸ்போர்டை வேறுபடுத்திக் காட்ட, இதன் முன் அட்டையில், தலைப்புக்குக் கீழே ஒரு சிறிய தங்க நிற சின்னம் அச்சிடப்பட்டிருக்கும்.
வழக்கமான பாஸ்போர்ட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், வழக்கமாகவுள்ள அம்சங்களுடன், டிஜிட்டல் அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த இ-பாஸ்போர்ட்டின் அட்டையில், ரேடியோ அதிர்வெண் அடையாள சிப் (RFID) மற்றும் அன்டெனா ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
இந்த சிப் வாயிலாக கைரேகை, டிஜிட்டல் புகைப்படம், பெயர், பிறந்ததேதி, பாஸ்போர்ட் எண் போன்ற தனிப்பட்ட விவரங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
அட்டையின் வெளிப்புறம் பாஸ்போர்ட் தலைப்பின் கீழ், ஒரு சிறிய தங்க நிற சின்னத்தை பார்க்க முடியும். வழக்கமான பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக இது அறிமுகப்படுத்தப்படவில்லை.
பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துதல், சர்வதேச பயண செயல்முறையை எளிதுபடுத்தும் நோக்குடன், உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் தயாரிக்கும் வாய்ப்புகளையும் இது குறைக்கிறது.
இ-பாஸ்போர்ட்டுக்கு வழக்கமான பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதை போன்றே உள்ளது. அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்குச் செல்லவும்.
புதிய கணக்கைப் பதிவு செய்து, இ-பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பவும். அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அல்லது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராவைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆன்லைன் மூலம் உரிய கட்டணத்தைச் செலுத்தவும். பின், நீங்கள் தேர்ந்தெடுத்த மையத்தில் நேர்காணலுக்கான (Appointment) நேரத்தை முன்பதிவு செய்யவும்.