ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும்: ஜெலன்ஸ்கி விருப்பம்
ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும்: ஜெலன்ஸ்கி விருப்பம்
UPDATED : செப் 21, 2025 07:48 AM
ADDED : செப் 21, 2025 07:45 AM

கீவ்: ''ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும்'' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யா மீதான மிக மோசமான உக்ரைன் பதிலடி தாக்குதல்களில் இந்தத் தாக்குதல் ஒன்றாகும். இதனால் உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டு வருகிறது.
இந்த சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது 19வது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்புகிறார். இது குறித்து ஜெலன்ஸ்கி கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனின் நலனுக்காக செய்த பல்வேறு விஷயங்களுக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கையை அமெரிக்கா செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம் அதன் பங்கை செய்கிறது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். சமீபகாலமாக ரஷ்ய அதிபர் புடின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் புடின் தன்னை ஏமாற்றியதாக டிரம்ப் கூறி வருவதால், ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.