உக்ரைனுடன் அமைதி பேச்சை தற்காலிகமாக நிறுத்தியது ரஷ்யா
உக்ரைனுடன் அமைதி பேச்சை தற்காலிகமாக நிறுத்தியது ரஷ்யா
ADDED : செப் 12, 2025 11:48 PM

மாஸ்கோ, : உக்ரைனுடனான அமைதிப்பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமைதி பேச்சுக்கு ஐரோப்பிய நாடுகள் தடையாக உள்ளது என, ரஷ்ய அதிபர் புடின் குற்றஞ்சாட்டினார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், மூன்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புடின், 'உக்ரைன் உடனான போரை பேச்சு மூலம் நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது' என்றார். மேலும், 'தேவைப்பட்டால் ஆயுதம் மூலமே ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும்' என்றும் எச்சரித்திருந்தார்.
மேலும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்து பேச தயாராக இருப்பதாகவும், உறுதியான முடிவுகளை தருவதாக இருந்தால் மட்டுமே பேச்சுக்கு தயார் எனவும் புடின் தெரிவித்திருந்தார்.
ஆனால், பேச்சுக்கான இடமாக மாஸ்கோவை ஏற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்து விட்டார். மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று கூறுகையில், ''ரஷ்யா - உக்ரைன் இடையேயான அமைதிப்பேச்சு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடைக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம்,'' என்றார்.