பாதுகாப்புக்காகவே விஷ்ணு சிலை அகற்றம்: தாய்லாந்து சமாளிப்பு
பாதுகாப்புக்காகவே விஷ்ணு சிலை அகற்றம்: தாய்லாந்து சமாளிப்பு
ADDED : டிச 25, 2025 10:23 PM

பாங்காக்: '' எல்லை பகுதியில் இருந்த விஷ்ணு சிலை அகற்றப்பட்டது, பாதுகாப்புக்காக தான் எனவும், மத நம்பிக்கைக்கு எதிராக இல்லை,'' என தாய்லாந்து தெரிவித்துள்ளது.
கம்போடியாவுடன் எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவத்தினர் இடித்து அகற்றிய சம்பவம் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: தற்போது நடைபெற்று வரும் தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், விஷ்ணு சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். இந்த கோவிலில் உள்ள ஹிந்து சிலை நாகரிகப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதி முழுவதும் உள்ள மக்களால் ஆழ்ந்த பக்தியுடன் போற்றி வணங்கப்படுகிறது. பிரதேச உரிமைக் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இதுபோன்ற அவமரியாதையான செயல்கள் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றன, மேலும் இவை நடக்கக்கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தாய்லாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிலையை அகற்றும் நடவடிக்கையானது எந்த மதம், நம்பிக்கைகள் அல்லது எந்தவொரு புனிதமான அம்சங்களை அவமதிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல. மாறாக தாய்லாந்தின் இறையாண்மையின் கீழ் உள்ள பகுதிகளை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிலையானது தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையிலான பிரச்னைக்குரிய பகுதியில் அமைக்கப்பட்டது. தாய்லாந்து பகுதியில் சட்டவிரோதமாக இறையாண்மையை கோரும் நோக்கில் கம்போடிய வீரர்கள் அந்த சிலையை நிறுவினர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

