ADDED : செப் 11, 2025 06:44 AM

நியூயார்க்: அமெரிக்காவின் உடா பல்கலையில் நேற்று உரை நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்று இருந்த பிரபல அரசியல் பிரமுகரும், டர்னிங் பாயிண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான சார்லி கிர்க் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சார்லி கிர்க், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர், பழமை வாத கொள்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய் செய்து பிரபலமானவர். அவரது படுகொலைக்கு, அமெரிக்காவின் இரு முன்னணி அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிபர் டிரம்ப் கூறுகையில், சார்லி படுகொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். அவர் அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவர் என்று தெரிவித்துள்ளார். படுகொலை தொடர்பாக முதலில் ஒருவரை பிடித்து விசாரித்து வந்த போலீசார், இப்போது அவரை விடுவித்து விட்டனர். கொலையாளியை தேடும் பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், சுடப்பட்ட உடனே சார்லி வாகனம் ஒன்றில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல் நிலையை பரிசோதித்தவர்கள் இறந்து விட்டதாக அறிவித்தனர் என்றார்.
யார் இந்த சார்லி கிர்க்
32 வயதான சார்லி, சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவின் முக்கிய வலதுசாரி அரசியல் பிரமுகர்களில் ஒருவர். எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.தேசிய கொள்கைக்கான கவுன்சிலிங் உறுப்பினராக இருந்தவர். வலதுசாரிகளின் மிக முக்கியமான குரல்களில் ஒருவர் என்று அவரை சில ஆண்டுக்கு முன் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
கொலை நடந்த பல்கலைக்கு செப்டம்பர் 15 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாவலர்கள் ஒருவர் கூட இல்லை என்று நேரில் பார்த்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.