அடுத்தது என்ன?: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் ஈரான் அதிபர்: சதிவேலை காரணமா என அரசு தீவிர விசாரணை
அடுத்தது என்ன?: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் ஈரான் அதிபர்: சதிவேலை காரணமா என அரசு தீவிர விசாரணை
UPDATED : மே 21, 2024 01:28 PM
ADDED : மே 21, 2024 01:14 AM

டெஹ்ரான்: ஹெலிகாப்டர் விபத்தில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு உறுதி செய்தது. விபத்துக்கு சதிவேலை காரணமா என விசாரணை நடக்கிறது. இடைக்கால அதிபராக, முதல் துணை அதிபர் முகமது மோஹ்பைர் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அடுத்த 50 நாட்களுக்குள் அதிபர் தேர்தல் நடக்க இருப்பதால், ஈரானில் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முஸ்லிம் பெரும்பான்மையினராக உள்ள மேற்காசிய நாடான ஈரானின் அதிபராக, 2021ல் பதவியேற்ற இப்ராஹிம் ரைசி, 63, அந்த நாட்டின் உயர் மதத் தலைவரான அயதுல்லா அலி கொமோனிக்கு மிகவும் நெருக்கமானவர்.
கொமோனிக்கு அடுத்ததாக, நாட்டின் உயரிய மதத் தலைவராக அவர் பதவியேற்பார் என்று கூறப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம், ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக, ஹெலிகாப்டரில் இப்ராஹிம் ரைசி பயணம் செய்தார். அவருடன், வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிர் அப்தொலஹின் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.
நாட்டின் வடமேற்கே, மலைகள் நிறைந்த பகுதியில் சென்றபோது, மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
நீண்ட தேடுதலுக்குப் பின், அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முழுதும் எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில், அதிபர் இப்ராஹிம் ரைசி உட்பட அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக, ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, முதல் துணை அதிபரான முகமது மோஹ்பைர், இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு, ஈரான் மதத் தலைவர் கொமேனி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அடுத்த 50 நாட்களுக்குள், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.
பல சர்ச்சைகளுக்கு பெயர்பெற்ற அதிபர் ரைசியின் மறைவுக்கு, பல நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உள்நாட்டில் பலர் வருத்தம் தெரிவித்தாலும், சிலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தீவிர மதப்பற்றாளரான ரைசி, 1980களில், நீதித்துறையில் பணியாற்றியபோது, ஈரான் - ஈராக் போரின்போது கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோரை எந்த விசாரணையும் இல்லாமல் கொல்வதற்கு உத்தரவிட்டார்.
இதனால், டெஹ்ரான் கொலைகாரர் என்று அவர் அழைக்கப்பட்டார்.
கடந்த 2022ல், ஷியா மதத்தினர் பெரும்பான்மையினராக உள்ள ஈரானில், ஹிஜாப் எனப்படும் முகத்தை மூடும் துணியை அணிய வேண்டும் என்பதை, அதிபர் இப்ராஹிம் ரைசி கட்டாயப்படுத்தினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாஷா அமினி என்ற இளம் பெண் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடு முழுதும் போராட்டங்கள் தீவிரமாகின. போலீஸ் அடக்குமுறையில், 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 22,000த்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் பொருளாதார தடை மற்றும் மற்ற நாடுகளின் ஆதரவு இல்லாததால், எண்ணெய் வளம் அதிகம் இருந்தும், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இவ்வாறு பல வகைகளில் பாதிக்கப்பட்டதால், மக்கள் கொதிப்புடன், பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்தது. உக்ரைனுக்கு எதிராக போரிடும் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பியது, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது என, மேற்காசிய பிராந்தியத்தில், ஈரானின் நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரித்தன.
இந்த சூழ்நிலையில், இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது, சில தரப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் பல இடங்களிலும், பல நாடுகளிலும் பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

