பாக்., வீரர்களுக்கு கை குலுக்காமல் 'கெத்து' காட்டிய இந்திய வீரர்கள்: வெற்றியை ராணுவத்திற்கு சமர்பித்து பேச்சு
பாக்., வீரர்களுக்கு கை குலுக்காமல் 'கெத்து' காட்டிய இந்திய வீரர்கள்: வெற்றியை ராணுவத்திற்கு சமர்பித்து பேச்சு
ADDED : செப் 15, 2025 11:23 AM

துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களிடம் கை குலுக்காமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியது பலரையும் பாராட்ட வைத்துள்ளது. பாக்.,கை வீழ்த்திய பின்னர் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார், ''பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் துணை நிற்கிறோம். இந்த வெற்றியை ராணுவத்திற்கு சமர்ப்பிக்கிறோம்'' என்றார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக நிலவிவரும் அசாதாரண சூழல்நிலை காரணமாக இருநாடுகளும் நேரடியான விளையாட்டுகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தன. உலக கோப்பை, ஆசிய கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் மட்டும் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டால் மட்டுமே இரு அணிகளும் போட்டிகளை எதிர்கொண்டன.
காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகளின் தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையேயான பகை இன்னும் அதிகரித்தது. இதனையடுத்து சமீபத்தில் நடந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற ‛வேர்ல்டு சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்-2025' (WCL) கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம் என இந்திய முன்னாள் வீரர்கள் உறுதியாக இருந்ததால், அப்போட்டி ரத்தானதாக அறிவிக்கப்பட்டது.
கை குலுக்கல்
இந்த நிலையில், தற்போது நடந்துவரும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (செப்.,14) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முன்னதாக இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், திட்டமிட்டபடி நேற்று போட்டி நடைபெற்றது. இரு அணிகளின் கேப்டன்களும் 'டாஸ்' போடுவதற்கு முன்னதாக கை குலுக்குவது வழக்கமான நடைமுறை. ஆனால், நேற்றைய போட்டியின்போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்கவில்லை.
பின்னர், 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவரில் 9 விக்., இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவரிலேயே இலக்கை எட்டி, வெற்றிப்பெற்றது. வெற்றிக்குப் பிறகு ஆடுகளத்தில் இருந்து வெளியேறி சென்று கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. அவர்கள் நேராக இந்திய அணியின் ஓய்வறைக்குச் சென்றார்கள்.
அதிர்ச்சி
மறுபுறம், பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியினர் கைகுலுக்குவார்கள் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்திய வீரர்களின் செயலைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் பரஸ்பரம் கை குலுக்கி செல்வது, கிரிக்கெட் விளையாட்டில் நாகரிகமான நடைமுறையாக இருந்த நிலையில், நேற்றைய போட்டியில் பாகிஸ்தானிடம் எந்த சமரசமும் இல்லை என்பது போல, இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தனர்.
ஆசியக்கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னதாகவும், கேப்டனர்கள் அறிமுக நிகழ்ச்சியில், இந்திய கேப்டன் சூர்யகுமார், பாகிஸ்தான் கேப்டனுக்கு கை குலுக்கவில்லை. இதனால் உடனே மேடையை விட்டு கீழிறங்கி சென்றார் பாக்., கேப்டன் சல்மான் அகா. இந்திய அணியினர் கை குலுக்காமல் சென்றதால் அதிருப்தியில் இருந்த பாகிஸ்தான் கேப்டன், போட்டிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவை புறக்கணித்தார். அதில் எப்போதும் இரு அணி கேப்டன்களும் போட்டி குறித்து பேசுவர். அந்த நிகழ்விற்கு சல்மான் அகா வர மறுத்தார்.
ராணுவத்திற்கு சமர்ப்பிப்பு
ஆட்டத்திற்குப் பிந்தைய பேட்டியில் கை குலுக்காதது பற்றி பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார், ''பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் துணை நிற்கிறோம். இந்த வெற்றியை ராணுவத்திற்கு சமர்ப்பிக்கிறோம்'' என்றார். பலரின் கோரிக்கையை தாண்டி போட்டியில் பங்கேற்றாலும், கை குலுக்காமல் தங்களது எதிர்ப்பை பதிவு செய்த இந்திய வீரர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.