நாட்டில் ஜனநாயகமே இல்லை; யாத்திரை செல்ல வேண்டிய கட்டாயம்: சொல்கிறார் ராகுல்
நாட்டில் ஜனநாயகமே இல்லை; யாத்திரை செல்ல வேண்டிய கட்டாயம்: சொல்கிறார் ராகுல்
UPDATED : செப் 11, 2024 11:00 AM
ADDED : செப் 11, 2024 08:02 AM

வாஷிங்டன்: 'நாட்டில் ஜனநாயக அமைப்புகள் செயல்பாட்டில் இல்லை. இதனால் யாத்திரை செல்லும் கட்டாயம் ஏற்பட்டது' என லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார்.
3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல், வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நான் யாத்திரை துவங்குவதற்கான முடிவு மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அவசியத்தால் ஏற்பட்டது. நாட்டில் ஜனநாயக அமைப்புகள் செயல்பாட்டில் இல்லை. ஜனநாயகத்தில் பொதுவாக வேலை செய்யும் அனைத்து பிரிவும் வேலை செய்யாததால், அரசியல் ரீதியாக யாத்திரை செல்ல கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். மக்களை நேரடியாக சந்திப்பதை தவிர வேறு வழியில்லை என்று கட்சி உணர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்தது.
நாடு முழுவதும் நடக்கணும்!
தனிப்பட்ட அளவில், இது நான் எப்போதும் செய்ய விரும்பிய ஒன்று. நான் சிறு வயதில் இருந்தே, ஒரு நாள், நாடு முழுவதும் நடக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. காங்கிரஸுக்கும் ஆளும் பாஜகவுக்கும் இடையிலான போட்டி இந்தியாவின் எதிர்காலத்திற்கான போட்டி. இந்தியாவில் ஒரு சித்தாந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது.
உற்பத்தித் துறை
அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு, குறிப்பாக விவசாயம், நிதி மற்றும் வரிவிதிப்பு போன்ற துறைகளில், சமூகத்தின் பல்வேறு துறைகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் உற்பத்தித் துறையில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் . இந்தியா உலகின் உற்பத்தியாளர் என்ற தனது பங்கை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டது.
உற்பத்தியைப் புறக்கணித்து, சேவைப் பொருளாதாரத்தை மட்டும் நடத்தினால், உங்களால் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியாது. உலகப் பொருளாதாரத்தில், குறிப்பாக உற்பத்தித் துறையில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தனது பங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.

