ஐரோப்பிய விமான நிலையங்களுக்கு குறி; சைபர் தாக்குதலால் சேவை பாதிப்பு
ஐரோப்பிய விமான நிலையங்களுக்கு குறி; சைபர் தாக்குதலால் சேவை பாதிப்பு
ADDED : செப் 21, 2025 03:53 AM

பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பாவின் சில முக்கிய விமான நிலையங்களில் செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் விமான போக்குவரத்து சேவை முடங்கியது.
உலகம் முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கான தொழில்நுட்ப சேவையை 'காலின்ஸ் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இதனை குறி வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனின் லண்டனில் உள்ள ஹீத்ரோ, பெர்லினின் பிரஸ்ஸல்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் முக்கிய விமான நிலையங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. இதனால் பயணியர் விமானநிலையத்தை கடந்து உள்ளே அனுப்பப்படும் நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்பாடு, வருகை உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் விமான பயணம் மேற்கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டனர். காலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவின் டல்லாசில்
1,800 விமானங்கள் பாதிப்பு
அமெரிக்காவின் டல்லாசில் இரண்டு விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 1,800க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. விமான போக்கு வரத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயலிழந்ததே இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. விமான நிலைய கண்காணிப்பு கோபுரங்களில் ராடார் மற்றும் செல்போன் சிக்னல்கள் சரியாக செயல்படாததால் விமான கட்டுப்பாட்டு அறைகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனம், 200க் கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது. 500க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதமானது. இதேபோன்று 'சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான 1,100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.