சீனாவின் பிரமாண்ட ரயில் திட்டம் இந்திய எல்லையை ஒட்டி அமைகிறது
சீனாவின் பிரமாண்ட ரயில் திட்டம் இந்திய எல்லையை ஒட்டி அமைகிறது
ADDED : ஆக 13, 2025 09:48 AM
பீஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் மற்றும் திபெத்தை இணைக்கும் பிரமாண்ட ரயில் பாதை திட்டத்தை சீனா விரைவில் துவங்க உள்ளது. இது நம் நாட்டின் எல்லையை ஒட்டி அமைய உள்ளதால், மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
நம் அண்டை நாடான சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள ஹோடானை, தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஷிகாட்ஸே உடன் இணைக்கும் வகையில் பிரமாண்ட ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது. இது, சீனாவின் மிகப்பெரிய கனவு ரயில் திட்டங்களில் ஒன்றாகும். இதற்கான திட்டமிடல், 2008ல் துவங்கியது. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான திட்ட மதிப்பில், உலகின் மிக உயரமான மற்றும் சவாலான நிலப்பரப்புகளில் 2,000 கி.மீ., துாரத்துக்கு இந்த ரயில் பாதை உருவாக்கப்பட உள்ளது.
ஆனால் இந்த திட்டம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே பதற்றத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், சர்ச்சைக்குரிய அக்சாய் சின்னில் இருந்து, 'ஜி - 219' தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில், நம் நாட்டின் எல்லையை ஒட்டி இந்த ரயில் பாதை அமைய உள்ளது.
அக்சாய் சின் என்பது, இந்தியா -- சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரி வரும் ஒரு எல்லைப் பகுதியாகும். கடந்த 1950க்கு பிற்பகுதியில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய இடமாகவே இருந்து வருகிறது. கடந்த 1962ல் நடந்த இந்திய - -சீன போரின்போது இந்த இடத்திற்காக நடந்த சண்டையில், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இருநாட்டு எல்லைக்கும் அக்சாய் சின் ஒரு மையப்புள்ளியாக இருப்பதால், சீனா தன் படைகளை எல்லைக்கு எளிதில் அனுப்ப இது பெரிதும் உதவும். அங்கு ரயில் பாதை அமைக்கப்படும் பட்சத்தில், சீனாவில் இருந்து ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் கொண்டு வருவது எளிதாகிவிடும்.
எனவே, இந்த திட்டம் இந்தியாவிற்கு ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். இதனால், நம் நாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும், ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனர்.