ADDED : டிச 31, 2025 08:38 PM

கோபன்ஹேகன்: உலகில் முதல் நாடாக டென்மார்க், கடித விநியோக சேவையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், 1624ம் ஆண்டு முதல் அஞ்சல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கடிதம் அனுப்புவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் இதனை நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
டென்மார்க்கில் 2000ம் ஆண்டு முதல் கடிதம் அனுப்புவோரின் எண்ணிக்கை, 90 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் 401 ஆண்டுகள் பழமையான இந்த கடித சேவையை அந்நாட்டின் போஸ்ட்நோர்ட் அஞ்சல் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 1,500 சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றில் பல ஏலத்தில் விற்கப்பட்டு, அந்த நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடித விநியோகம் நேற்றுடன் நிறுத்தப்பட்ட நிலையில், பார்சல் விநியோகத்தில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

