வங்கதேசத்தில் ஓயாத வன்முறை... டாக்காவில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி
வங்கதேசத்தில் ஓயாத வன்முறை... டாக்காவில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி
ADDED : டிச 25, 2025 07:09 AM

டாக்கா: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச முன்னாள் பிரதமர் மகன் தாயகம் திரும்ப உள்ள நிலையில், டாக்காவில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக்கொலை, போராட்டக்காரர்களால் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக அடித்துக் கொலை என அடுத்தடுத்த சம்பவங்களால் வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, 17 ஆண்டுகளாக வங்கதேசத்தை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், இன்று நாடு திரும்புகிறார். ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால், பிரிட்டனின் லண்டனில் தஞ்சம் புகுந்திருந்தார். வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் தாரிக் ரஹ்மான் வங்கதேசம் திரும்புவதால், முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மேலும் அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது. நேற்று மாலை தலைநகர் டாக்காவில் உள்ள மோக்பஜார் மேம்பாலத்தில் இருந்து சாலையில் சென்று கொண்டிருந்தோர் மீது வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில், சைபூல் சையாம்,21, என்ற இளைஞர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
அடுத்தடுத்த சம்பவங்களால் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால், வங்கதேச போலீசார் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.

