அருணாச்சல்லில் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா: மீண்டும் அத்துமீறல்
அருணாச்சல்லில் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா: மீண்டும் அத்துமீறல்
UPDATED : ஏப் 01, 2024 05:45 PM
ADDED : ஏப் 01, 2024 11:32 AM

பீஜிங்: அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி 30 இடங்களின் பெயர்களை சீனா வெளியிட்டது. சீனா பெயரிட்ட 30 இடங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது தான் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை, அதை ஒட்டி அமைந்துள்ள நம் அண்டை நாடான சீனா, பல ஆண்டுகளாக உரிமை கோரி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையை பலமுறை நிராகரித்துள்ள மத்திய அரசு, அது நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என வலியுறுத்தி வருகிறது.
சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையான, சேலா சுரங்கப் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அங்கு பிரதமர் சென்றதற்கு கண்டனம் தெரிவித்த சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் சீனியர் கலோனல் ஜாங் ஜியோங், அருணாச்சல பிரதேசம் தங்களுக்கே சொந்தமானது என மீண்டும் உரிமை கோரினார். அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அங்கீகரிப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்து இருந்தது.
30 இடங்கள்
இந்நிலையில், அருணாச்சல் பிரதேச மாநிலத்தை உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தில் உள்ள 12 மலைகள், 4 நதிகள், ஒரு நிலப்பகுதி உள்ளிட்ட மேலும் 30 இடங்களுக்கு இன்று(ஏப்ரல் 01) சீன சிவில் விவகார அமைச்சகம் பெயரிட்டுள்ளது. அருணாச்சலில் 2017இல் 6 இடங்களுக்கும், 2021இல் 15 இடங்களுக்கும், 2023இல் 11 இடங்களுக்கும் சீனா பெயரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்
இது குறித்து ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது: அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயரை மாற்றினால் சீனாவுக்கு சொந்தமாகிவிடாது. உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால் அது எனக்கு சொந்தமாகிவிடுமா?. சீனா பெயரிட்ட 30 இடங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது தான். அருணாச்சல பிரதேசம் எல்லைப்பகுதியில் நமது ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

