அரசுக்கு எதிராக பேசுபவர்களை முடக்குகிறார்கள்: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
அரசுக்கு எதிராக பேசுபவர்களை முடக்குகிறார்கள்: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
ADDED : செப் 11, 2025 07:31 PM

திருச்சி: '' திமுக அரசுக்கு எதிராக பேசுபவர்களை காவல்துறை மூலம் முடக்குகிறார்கள்,'' என யுடியூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சியில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜரான பிறகு யுடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி: என் மீது ஏற்கனவே 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 15 வழக்குகள் விசாரணையிலும், 20 வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் யூடியூபில் மீடியா சேனல் நடத்துகிறேன். தினமும் அரசியல் நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
இன்று திருச்சி, அடுத்த வாரம் மதுரை, அதற்கு அடுத்த வாரம் கோவை, அதற்கு அடுத்த வாரம் கரூர் என தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நீதிமன்றத்துக்கு அழைத்தால் என்னுடைய மீடியாவை நடத்த முடியாது என்பதாலும், எனது ஊடகத்தை தொடர்ந்து நடத்துவதால், திமுக அரசு அம்பலப்படுத்தப்படுகிறது என்பதாலும் இப்படி செய்கின்றனர். காவல்துறையை பயன்படுத்தி என்னை பேச விடாமல் தடுக்கவும், முடக்கவும் செய்கின்றனர்.
இன்னும் இரண்டு நாட்களில் திருச்சிக்கு விஜய் வர உள்ளார். அவருக்கு கை காட்டக்கூடாது. உட்காரக்கூடாது. எழுந்து நிற்கக்கூடாது என எத்தனை நிபந்தனை விதிக்கிறார்கள் என்பதை பார்க்கிறீர்கள். அவர் அரசியல் கட்சித் தலைவர். அவர் பிரசாரம் செய்ய வேண்டும் என்றால், பிரசாரம் செய்யட்டும். ஆனால், காவல்துறையை பயன்படுத்தி அவரை எப்படி முடக்குகிறார்களோ அதுபோல என்னையையும் காவல்துறையை பயன்படுத்தி முடக்குகிறார்கள். அரசுக்கு எதிராக பேசுபவர்கள், குரல் கொடுப்பவர்கள் அனைவரையும் காவல்துறையை பயன்படுத்தி முடக்குவதை பார்க்கிறோம்.
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் செல்லும் இடம் எல்லாம் ஆம்புலன்சை விட்டு அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டதாக இபிஎஸ் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மதுரை மாநாட்டில் ரசிகர் ஒருவரை பவுன்சர் தூக்கிப் போட்டதற்காக விஜய் மீது வழக்குப் போட்டுள்ளனர். காவல்துறையை பயன்படுத்தி எதிர்க்குரல், எதிர்க்கட்சிகள் அத்தனை பேரையும் தடுக்க வேண்டும் என்பதற்காக அரசு செயல்படுகிறது. காவல்துறை அதற்கு ஏற்றார் போல் திமுகவின் கூலிப்படையாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.