கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ., விசாரணை எதிர்த்து மேல்முறையீடு ஏன்: அரசுக்கு அன்புமணி கேள்வி
கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ., விசாரணை எதிர்த்து மேல்முறையீடு ஏன்: அரசுக்கு அன்புமணி கேள்வி
ADDED : டிச 05, 2024 01:14 PM

சென்னை: 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்த சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா? தி.மு.க., தொடர்பு வெளி வராமல் தடுக்க துடிப்பது ஏன்?' என தமிழக அரசுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் நச்சு சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. கள்ளச்சாராய சாவு வழக்கில் உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. கள்ளச்சாராய சாவு வழக்கு விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்காத தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.
மடியில் கனமில்லை
இந்த, விவகாரத்தில் தி.மு.க., அரசு எந்தத் தவறும் செய்யவில்லை; சட்டப்படி தான் செயல்பட்டது என்றால் வழக்கை சி.பி.சியிடம் ஒப்படைப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கத் தேவையில்லை. மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் தேவையில்லை. ஆனால், இந்த வழக்கில் அவசர அவரசமாக மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம், கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியது, அதற்கு மறைமுகமாக ஆதரவளித்தது உள்ளிட்ட உண்மைகள் வெளிவந்து விடுமோ? என்று திமுக அரசு அஞ்சுவதை புரிந்து கொள்ள முடிகிறது.
கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் தி.மு.க.,வின் நிர்வாகிகளும், சட்டசபை முன்னாள், இந்நாள் உறுப்பினர்களும் தான் முழு ஆதரவாக இருந்திருக்கின்றனர் என்பது தான் பா.ம.க.,வின் குற்றச்சாட்டு.
மேல்முறையீடு
உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால், இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவந்து விடும் என்ற அச்சம் தான் மேல்முறையீட்டுக்கு காரணம் ஆகும். சில தவறுகளை சில காலம் மறைக்கலாம்; பல குற்றங்களை பல காலம் மறைக்கலாம்; ஆனால், எல்லா தவறுகளையும், குற்றங்களையும் எல்லா காலத்திற்கும் மறைக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தாலும் கூட, அதிலும் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும். இது உறுதி. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

