குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன முக்கிய தகவல்
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன முக்கிய தகவல்
UPDATED : செப் 14, 2025 07:53 PM
ADDED : செப் 14, 2025 07:45 PM

கன்னியாகுமரி: 'அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும்' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள கண்ணாடி பாலம் , விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளூர் சிலை ஆகியவற்றை தனது குடும்பத்துடன் தனிப்படகில் சென்று இஸ்ரோ தலைவர் நாராயணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 10 ஆயிரத்து 360 கோடி ரூபாய் செலவில் ஜூலை மாதத்தில் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து synthetic aperture radar தொழில் நுட்பத்தில் உருவான செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 365 நாளும் துல்லியமாக செயல்பட்டு 12 நாளுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வந்து கண்காணித்து பேரிடர் , கால நிலை போன்ற தகவல்கள் அனுப்ப முடியும். இது இந்திய மக்களுக்கு பெருமிதமான தருணம். இன்னும் 60 நாட்களில் இந்த செயற்கை கோள் அனுப்பும் தகவல்கள் பொதுமக்கள் பயன்படும் விதத்தில் அனைவருக்கும் வழங்கப்படும்.
இந்திய மக்களை பாதுகாக்கவும் இஸ்ரோ உதவி வருகிறது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது 25 செயற்கைக்கோள் சிறப்பாக துல்லியமாக செயல்பட்டன. தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்பதால் கூடுதல் தகவல்கள் கூற முடியாது. 1000 கோடி ரூபாய் செலவில் நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளம் விரைவில் அமைய உள்ளது.
2300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசின் உதவியோடு இஸ்ரோ பெற்றுள்ளது.அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும். கண்ணாடி பாலம் வித்தியாசமாக நன்றாக உள்ளது. தமிழக அரசுக்கு பாராட்டுகள். இவ்வாறு நாராயணன் கூறினார்.