புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 05, 2024 07:17 AM

திருப்பூர் : புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணிகளை விரைந்து துவக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவதையொட்டி, கடந்த 2023 ஜூன் மாதம் முதல், புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில், மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுவருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், கடந்த ஏழு மாதங்களில், ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள், நிலுவையில் உள்ளன. புதிய கார்டுக்கான விண்ணப்பங்கள் அங்கீகாரம் வழங்கப்படாமலும், அச்சிடும் பணிகளும் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ரேஷன் பொருட்களை பெற முடியாமல், ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றன.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால் புதிய ரேஷன் கார்டு அச்சிட முடியாது.விண்ணப்பித்து காத்திருப்போர், மேலும் ஆறுமாதங்களுக்கு ரேஷன் கார்டு பெறமுடியாத நிலை ஏற்படும். புதிய ரேஷன் கார்டு அச்சிட்டு பணிகளை உடனடியாக துவக்க அரசு உத்தரவிட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

