ADDED : ஏப் 23, 2026 10:31 PM

பெரம்பலுார்: ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்போம் என்று திருமாவளவன் கூறி உள்ளார்.
அரியலுார் மாவட்டம், அங்கனுார் ஓட்டுச்சாவடியில், விசிக தலைவர் திருமாவளவன் ஓட்டு போட்டார்.பின்னர், அவர் அளித்த பேட்டி:
திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை, மக்கள் தீர்ப்பாக எழுத உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கூறியது போல் இரண்டு கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல; இரண்டு அணிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல; இரண்டு கருத்தியல்களுக்கு எதிரான யுத்தம். அது தான் இந்த தேர்தல்.
அந்த யுத்தத்தில் தமிழகம் வெல்லும். மீண்டும் ஸ்டாலின் முன் மாதிரி ஆட்சி அமையும். சமூக நீதி தலைத்தோங்கும். ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு பெண்களை மையப்படுத்தி மேம்படுத்த புதுமைப் பெண், உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட பெண்களை வலிமைப்படுத்தும் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் திமுக வெறுப்பை மட்டுமே மூலதனமாக்கி, திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பரப்புரையை மட்டுமே மேற்கொண்டார். அவருடைய எதிர்கால திட்டங்கள் குறித்து, கொள்கை கோட்பாடுகள் குறித்து, அவர் ஒரு நாளும் பேசியதில்லை. அவர் வெளிப்படுத்திய திமுக வெறுப்பு உள்நோக்கம் கொண்டது என்பதை மக்கள் உணர்ந்து இருக்கின்றனர்.
ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்தியாவில் முதல் மாநிலம் என்ற ஒரு எல்லையை தொட்டது. அது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் 11.9% உள்ளூர் உற்பத்தி சதவீதத்தை உயர்த்தக்கூடிய அளவில் பொருளாதாரம் இந்திய அளவில் உயர்ந்து இருந்தது.
அப்படிப்பட்ட வளர்ச்சியை, நாம் மேலும் உறுதிப்படுத்துவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தொலைநோக்கு பார்வை அவருக்கு உள்ளது. எனவே, அடுத்த ஆட்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக, அனைத்து துறைகளிலும் தளங்களிலும் கொண்டு செல்ல பாடுபடுவார். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
