UPDATED : நவ 16, 2024 11:57 PM
ADDED : நவ 16, 2024 11:55 PM

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், அமரன் படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டரில், நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் பின்னணியில், பயங்கரவாத குழுக்களின் செயல்பாடு ஏதும் உள்ளதா என, கியூ பிராஞ்ச் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எதிர்ப்பு
சில அரசியல் கட்சிகள் இப்படத்தை வரவேற்றுள்ள நிலையில், முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறி, ஆளும் தி.மு.க., கூட்டணியில் உள்ள சில கட்சிகள் உட்பட ஒரு தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இப்படம் பெரும் அரசியலாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அமரன் படம் திரையிடப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில், நேற்று அதிகாலையில் இரண்டு நபர்கள், பாட்டில்களில் அடுத்தடுத்து பெட்ரோல் நிரப்பி தியேட்டர் வளாகத்திற்குள் வீசினர்.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சின் போது, பார்வையாளர்கள் யாரும் இல்லை. செக்யூரிட்டி மட்டுமே இருந்தார். அதனால், யாருக்கும் பாதிப்பு இல்லை; சேதமும் இல்லை. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரித்தனர்.
தியேட்டருக்கு அருகில் உள்ள கட்டடத்தில் இருந்த, 'சிசிடிவி கேமரா' காட்சிகளில், இரண்டு வாலிபர்கள், பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து தியேட்டருக்குள் வீசிவிட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
அப்பகுதிகளில் உள்ள வேறு சிசிடிவி கேமரா காட்சிகளையும் சேகரித்து விசாரணை நடந்து வருகிறது.
போராட்டம்
தியேட்டரில் குண்டு வீசியது குறித்து நேரில் பார்வையிட்டு, மேல் நடவடிக்கைக்கு வலியுறுத்துவதற்காக, ஹிந்து முன்னணி அமைப்பினர் அதன் மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், மாநில செயலர் குற்றாலநாதன் தலைமையில், தியேட்டர் முன் திரண்டனர்.
அங்கு பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார், ஹிந்து முன்னணியினர் அங்கு கூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு, ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். 'நீங்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறீர்கள்' என்றும் விமர்சித்தார்.
அப்போது, பலத்த மழை கொட்டியது. கொட்டிய மழையிலும் ஹிந்து முன்னணியினர் கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, வேனில் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
பயங்கரவாத பின்னணி
அமரன் படத்திற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர், மேலப்பாளையம் அலங்கார் தியேட்டர் அருகே, சில நாட்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிந்து முன்னணி அமைப்பினரும் அரசியல் ரீதியாக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.
விசாரணை
இருப்பினும், அமரன் பட விவகாரத்தை பயன்படுத்தி, மேலப்பாளையத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற வேறு ஏதாவது அமைப்புகள் பின்னணியில் செயல்படுகின்றனவா என கியூ பிராஞ்ச் போலீசார், ஏ.டி.எஸ்., எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், சி.பி.சி.ஐ.டி., போலீசார் என பல்வேறு குழுவினர், நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மேலப்பாளையம், எப்போதும் வன்முறையை விரும்பாத மாநகர பகுதியாகும்.
இருப்பினும், வெளியில் இருந்து துாண்டிவிடும் அமைப்புகளால் அவ்வப்போது இங்கே இளைஞர்கள் கைதாகும் சூழல் ஏற்படுகிறது; இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

