புறம் போக்கு நிலங்களில் வெட்டப்படும் மரங்கள்; கண்டுகொள்ளாத வனத்துறை
புறம் போக்கு நிலங்களில் வெட்டப்படும் மரங்கள்; கண்டுகொள்ளாத வனத்துறை
UPDATED : பிப் 03, 2024 03:34 PM
ADDED : பிப் 02, 2024 10:38 PM

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் அனுமதி இல்லாமல், புறம்போக்கு நிலங்களில் இருந்து, சில்வர் ஓக் மரங்கள் இரவில் வெட்டி கடத்தப்படுவது தொடர்கிறது.
நீலகிரியில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்கள் தோட்டங்களுக்கு நிழல் தருவதுடன், கிளைகளை விவசாயிகள் விறகுக்காக பயன்படுத்துகின்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் நன்கு முதிர்ந்த மரங்களை விற்பனை செய்வதால், மொத்தமாக வருவாய் கிடைக்கிறது. பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதாக கூறி, சமீபகாலமாக, புறம்போக்கு நிலங்களில் இருந்து, மரங்களை வெட்டி கடத்துவது தொடருகிறது. ஒரு நாளுக்கு, கட்டபெட்டு -கோத்தகிரி வழியாக குறைந்தப்பட்சம், 15 லாரிகளில் மரங்கள் கடத்தப்படுகின்றன. தவிர, உள்ளூர் சாமில்களுக்கும் அதிகளவில் மரங்கள் 'சப்ளை' செய்யப்படுகிறது.
இதனை கண்டுக்கொள்ளாமல் இருக்க, வனத்துறையினருக்கு மர வியாபாரிகள் 'கவனிப்பு' அளிப்பதாக குற்றசாட்டு உள்ளது. இதனால், சோதனை சாவடிகளில் லாரிகள் சோதனைக்கு உட்படுத்துவது இல்லை.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,'நீலகிரி மாவட்டத்தில், ஏறக்குறைய, 75 சதவீதம் அளவுக்கு சில்வர் ஓக் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள, 25 சதவீத மரங்களையாவது வெட்டாமல் காப்பாற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, இரவு நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும்,' என்றனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

