மத்திய அரசு நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
மத்திய அரசு நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
ADDED : செப் 19, 2025 12:03 PM

சென்னை: ''மத்திய அரசு தன் நிதியை தாமதமின்றி சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும்'' என ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்புக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மருத்துவம், உழவர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் 3.38 லட்சம் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 55.12 லட்சம் பேர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். முதியோர், பழங்குடிகள் இடம்பெற்று சுய உதவிக்குழுக்கள் மூலம் 1.57 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.
வளர்ச்சி விகிதம்
மதிய உணவு திட்டம் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் மேம்பட்டு உள்ளது. சிறு விவசாயிகளுக்கு 55% மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 45% மானியமும் வழங்கப்படும். விவசாயிகள் நலத்திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டு உள்ளது.
நிதி வழங்கணும்
நமது அரசின் எல்லா திட்டங்களும் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டு என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் மாநில அரசின் பங்குத்தொகையை எந்தவித காலதாமதமின்றி விடுவிக்கிறோம்; அதேபோல மத்திய அரசு தன் நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சிலை திறப்பு
முன்னதாக, சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் திருவுருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்கிடையே அமெரிக்காவின் ஈக்வினிக்ஸ் நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ574 கோடியில் புதிய நிறுவனம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.