ADDED : செப் 26, 2024 02:25 AM

சென்னை:நாட்டில், 'ஸ்மார்ட் மீட்டர்' எனப்படும் ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியதில், தமிழகம் 1.26 லட்சம் மீட்டர்களுடன், 12வது இடத்தில் உள்ளது.
எஸ்.எம்.எஸ்.,
ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க உதவும் 'ஸ்மார்ட் மீட்டர்'களை, அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்துமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய மின் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த மீட்டரில், மின் பயன்பாடு கணக்கெடுக்கும் தேதி பதிவேற்றப்படும்.
இதனால், கணக்கெடுக்க வேண்டிய தேதி வந்ததும் தானாகவே கணக்கெடுத்து, மின் கட்டண விபரம் பற்றிய எஸ்.எம்.எஸ்., நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு அனுப்பப்படும்.
டெண்டர்
தமிழகத்தில் 3.01 கோடி மின் இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, வாரியம் முடிவு செய்துள்ளது.
சோதனை முயற்சியாக, சென்னை தி.நகரில், 1.26 லட்சம் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதி இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த ஆண்டு 'டெண்டர்' கோரப்பட்டது.
அதில், இதுவரை முடிவு எடுக்கவில்லை. அதேசமயம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகம் செயல்படுத்திய மாநிலங்கள்
------------------------------------
மாநிலம் - எண்ணிக்கை லட்சத்தில்
பீஹார் - 31.10
அசாம் - 20.58
உ.பி., - 11.86
ம.பி., - 9.46
ஹரியானா - 8.47
பஞ்சாப் - 6.58
ராஜஸ்தான் - 6.14
ஜம்மு காஷ்மீர் - 5.59
டில்லி - 2.60
மஹாராஷ்டிரா - 2.42
ஆந்திரா - 1.31
தமிழகம் - 1.26
***

