2 ஆண்டுகளாக உ.பி., பெண்ணுக்கு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை
2 ஆண்டுகளாக உ.பி., பெண்ணுக்கு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை
ADDED : செப் 14, 2025 05:36 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவை சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமை தொகை, உத்தரபிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு இரண்டு ஆண்டுகளாக செல்வது, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அளிக்கப்பட்ட மனு வாயிலாக தெரியவர, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி, 50. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தார்.
அவருக்கு எந்த தகவலும் இல்லாததால், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஜூலை, 25ல் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மீண்டும் விண்ணப்பித்தார்.
மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், 'உங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. வங்கி கணக்கை சரிபாருங்கள்' என, கூறினர்.
அதன்பின், கிணத்துக்கடவு, 'பேங்க் ஆப் பரோடா' வங்கியில் விசாரித்தார். ஆய்வு செய்த வங்கி ஊழியர்கள், உங்கள் ஆதார் எண்ணுடன், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சாந்திதேவி என்பவரது வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்குக்கு, மகளிர் உரிமைத்தொகை மாதம்தோறும் செல்வதாக தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி, இந்த விபரங்களை குறிப்பிட்டு, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், செப்., 11ல் மனு அளித்தார். அதில், இரண்டு ஆண்டுகளாக, வேறு ஒருவரின் வங்கி கணக்குக்கு சென்றுள்ள மகளிர் உரிமை தொகையை மீட்டு, தன் வங்கி கணக்குக்கு மாற்ற வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.
கிணத்துக்கடவு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பானுமதி கூறுகையில், ''மகளிர் உரிமைத்தொகை சென்னையில் இருந்து, பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பிட்ட பயனாளியின் வங்கி கணக்குக்கு, பணம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.