"சமூகநீதி குறித்து பேச ஸ்டாலினுக்கு யோக்கியதை இல்லை" - முருகன் தாக்கு
"சமூகநீதி குறித்து பேச ஸ்டாலினுக்கு யோக்கியதை இல்லை" - முருகன் தாக்கு
ADDED : ஏப் 12, 2024 10:15 AM

ஊட்டி: சமூகநீதி குறித்து பேச முதல்வர் ஸ்டாலினுக்கு யோக்கியதை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
நீலகிரியில் போட்டியிடும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த தொகுதியில் எனக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. திமுக வேட்பாளர் ராசா செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு கிளம்புகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வாக்காளர் அட்டையை கூட நீலகிரிக்கு மாற்றவில்லை. ராசா, சமுதாயத்தை அவமானமாக பேசுகிறார்.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக இருக்க வேண்டும். அதிகாரிகள் ஒரு சார்பாக நடந்து கொள்கின்றனர். தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் என்னையே சுற்றி சுற்றி வருகின்றனர். ராசாவை கண்டுகொள்வதில்லை. அவரது வாகனத்தை முறையாக சோதிப்பதில்லை.
திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சமூக நீதி குறித்து பேச யோக்கியதை கிடையாது. அருந்ததி மக்களுக்காக இருக்கின்ற ஒரே ரிசர்வ் தொகுதி இந்த நீலகிரி. இங்கு கூட இந்த சமுதாய வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. இவர் சமூக நீதி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. ஆன்மிகத்தில் மக்கள் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் திமுகவினர் அவமானப்படுத்துகின்றனர்.
2 ஜிக்கும், மோடிஜிக்கும்
இந்த தேர்தல் 2 ஜிக்கும், மோடிஜிக்கும் இடையில் நடக்கும் தேர்தல். இப்பகுதி மக்கள் மீது திமுகவினருக்கு அக்கறை இல்லை. பிரிவினைவாதிகளுக்கு இங்கு இடமில்லை. தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல . இவ்வாறு முருகன் கூறினார்.

