ADDED : பிப் 15, 2024 01:57 AM
சென்னை:''மேகதாது அணை பிரச்னையை, மத்திய நீர்வள கமிஷன் கவனத்திற்கு எடுத்துச் செல்ல, தமிழகம் ஒப்புக் கொண்டதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. நடக்காத ஒன்றை நடந்ததாக கூறியுள்ளனர்,'' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில், மேகதாது அணை குறித்த விவாத பொருளை, ஆலோசனை கூட்டத்தில் வைக்க, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய நீர்வளத் துறை இயக்குனர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இக்கட்டான சூழல்
இந்நிலையில், இம்மாதம் 1ம் தேதி நடந்த ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை பிரச்னையை நீர்வளத் துறை கமிஷனிடம் கொண்டு செல்ல ஓட்டெடுப்பு நடந்துள்ளது.
இந்த விஷயத்தை, கர்நாடக அரசு தந்திரமாக கையாண்டுள்ளது. ஓட்டெடுப்பில் பங்கேற்காமல், தமிழகம் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். ஓட்டெடுப்பில் பங்கேற்றதால், இக்கட்டான சூழல் ஏற்பட்டு உள்ளது.
அமைச்சர் துரைமுருகன்: மேகதாது அணை குறித்து இரண்டு, மூன்று முறை பேச முயற்சித்தனர். நம் எதிர்ப்பால் அது நடக்கவில்லை.
மேகதாது அணை பிரச்னையை விவாதப்பொருளாக எடுக்க வேண்டாம் என, மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடமும் முறையிடப்பட்டது; அவரும் ஏற்றுக் கொண்டார்.
விஷமிகள் முயற்சி
ஆனால், சில விஷமிகள், வேண்டுமென்றே அதற்கு முயற்சிக்கின்றனர். மேகதாது அணை குறித்து ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது என, இம்மாதம் 1ம் தேதி நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், நேற்று வந்த நிகழ்ச்சி நிரல் கடிதத்தில், மேகதாது அணை பிரச்னையை, மத்திய நீர்வள கமிஷன் கவனத்திற்கு கொண்டு செல்ல, தமிழகம் ஒப்புக் கொண்டதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
நடக்காத ஒன்றை நடந்ததாக கூறியுள்ளனர்; இது அயோக்கியதனம்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஏதாவது ஒரு வகையில், தமிழகத்திற்கு தொல்லை கொடுக்கின்றனர். அதை எதிர்க்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

