'சீமானும், விஜயும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்': திருமாமளவன்
'சீமானும், விஜயும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்': திருமாமளவன்
ADDED : டிச 28, 2025 02:17 AM

திருச்சி: “சீமானும், விஜயும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி:
கூட்டணியாக உருவாக முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் சிதறி கிடக்கின்றன. கூட்டணியே அமையாமல், 'தி.மு.க., கூட்டணியை வீழ்த்துவோம்' என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறுவது நகைச்சுவை.
பா.ம.க.,வின் ஒரு அணி, தி.மு.க., கூட்டணிக்கு வரும் எனக்கூறுவது வெறும் ஊகம்தான்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும், சனாதன சக்திகளுக்கு துணை போகும் வகையில் செயல்படுகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் பா.ஜ.வுக்கு ஆதரவாக உள்ளதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் தேசியம் பேசுவது போல் சீமானும், ஈ.வெ.ரா., குறித்து பேசுவது போல் விஜயும் நாடகமாடுகின்றனர். கொள்கை எதிரியை விஜய் விமர்சிக்கவில்லை.
ஈ.வெ.ரா.,வின் அரசியல், விளிம்புநிலை மக்களுக்கானது. அதை தகர்ப்பேன் என சீமான் கூறுவது, ஆர்.எஸ்.எஸ்., கடப்பாரையாக அவர் மாறியதை காட்டுகிறது.
அவர் பேசுவது, தமிழ் தேசிய அரசியல் அல்ல; சனாதன அரசியல். பா.ஜ.,- - ஆர்.எஸ்.எஸ்., செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களாக விஜயும், சீமானும் முகமூடி அணிந்து வந்து உள்ளனர்.
தமிழகத்தில், பா.ஜ.,வினர் இந்தளவுக்கு ஆட்டம் போட காரணமே அ.தி.மு.க., தான். பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., சக்திகள் தமிழகத்தில் வளர அ.தி.மு.க., உதவுகிறது. பா.ஜ., வலுப்பெற்றால், அ.தி.மு.க.,வும் ஈ.வெ.ரா., அரசியலும் இல்லாமல் போய் விடும்.
பா.ஜ.,வுடன் கருணாநிதி கூட்டணி வைத்தபோது, கருத்தியலில் உறுதியாக இருந்தார். தற்போது, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.,வினர், பா.ஜ.,வின் கருத்தியல் அடிமையாகி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

