பொன்முடிக்கு மீண்டும் பதவியா? நெல்லையில் சபாநாயகர் தகவல்!
பொன்முடிக்கு மீண்டும் பதவியா? நெல்லையில் சபாநாயகர் தகவல்!
ADDED : மார் 12, 2024 11:43 PM
திருநெல்வேலி:''முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ., பதவி வழங்குவது தொடர்பாக, ஏற்கனவே கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சபாநாயகர்அப்பாவு கூறினார்.
நெல்லையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்திய, தமிழக கலாசாரத்தை கால்டுவெல் போன்றோர் அழிக்க வந்ததாக கவர்னர் ரவி, ராஜ்நாத் சிங் போன்றோர் கூறி வருகின்றனர்.
குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே கல்வி கற்க முடியும், சொத்துக்கள் வாங்க முடியும் என்ற நிலை, கிறிஸ்துவ மிஷனரிகளின் வரவுக்குப் பின் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது என்பதைத் தான்,
இவ்வாறு கூறுகின்றனர்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கிறிஸ்துவ அமைப்பினர் பாடுபட்டனர். இதனால்தான், 90 சதவீத மக்கள் கால்டுவெல் போன்றோரை ஏற்றுக் கொண்டுஉள்ளனர்.
உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான வழக்கில் ஐகோர்ட் தண்டனை விதித்தது.
மேல் முறையீட்டில் இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட் தடை செய்துள்ளது. இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிய வருகிறது.
ஏற்கனவே வயநாடு எம்.பி., ராகுல், லட்சத்தீவு எம்.பி., முகமது பைசல், காசிப்பூர் எம்.பி., அன்சாரி உள்ளிட்டோரின் வழக்கு தீர்ப்புகளின் அடிப்படையில், சட்டசபை தலைமைச் செயலர் உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வார்.
இவ்வாறு அப்பாவு கூறினார்.

