ADDED : பிப் 26, 2024 10:56 PM
ராமநாதபுரம் : தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த அவர்களிடம் முன் பணம் கேட்டுள்ளதால் கொதிப்படைந்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தொகை, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
தற்போது ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்வதற்கான விருப்பக்கடிதம் கேட்கப்பட்டது. அதில் முன் பணமாக ரூ.2000 செலுத்துமாறு அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை கேட்டு போராட்டம் நடத்துவதை திசைமாற்றும் வகையில் அரசு அறிவித்துள்ள இந்த காப்பீடு திட்டம் உள்ளது. மற்ற துறைகளில் மருத்துவப்படி ரூ.300 , குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கப்படுகிறது. மருத்துவ காப்பீட்டுக்கு முன் பணம் கேட்பது எந்த விதத்திலும் நியாயமற்ற செயல் என தெரிவித்துள்ளனர்.
மணிக்கண்ணு, அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் அமைப்பின் மண்டல துணைப் பொதுச் செயலாளர்: அரசு எங்களின் அகவிலைப்படி உயர்வு போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு தெளிவில்லாத காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது. என்னென்ன சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்ற எந்த அறிவிப்பும் இல்லை. இருப்பதை கொடுக்காமல் இல்லாததை கொடுப்பதாக சொல்வது கபட நாடகம் என்றார்.
